இலக்கணையால் தந்தது. தங்கிய கனகமாடந்தன்னிடை யென்று பிரதிபேதம். (116) 65.-திரௌபதியைஒருபுறத்தில் மறைத்துவைத்திட்டு வீமசேனன்இருக்க, கீசகன்அப்பொழிலூடு சேர்தல். அணங்கனசாயலாளையப்புறங்கரந்துவைத்து மணங்கமழலங்கன்மார்பன்மண்டபத்திருந்தகாலைப் பிணங்கலனணிந்ததன்னபேரெழிற்பெற்றியானெஞ்ச உணங்கநாப்புலரவந்தவ்வுயர்பொழிலூடுசேர்ந்தான். |
(இ -ள்.) அணங்கு அன - தெய்வப்பெண்போன்ற, சாயலாளை - மென்மையான அழகையுடைய திரௌபதியை, அப்புறம் - அங்கு ஒருபுறமாக, கரந்து வைத்து - மறைந்திருக்குமாறு வைத்திட்டு,-மணம் கமழ் அலங்கல் மார்பன் - நறுமணம் வீசுகின்ற மலர்மாலையை யணிந்த மார்பையுடையனான (பெண்வேடம்பூண்டிருந்த) வீமன், மண்டபத்து இருந்த காலை - மண்டபத்தி லிருந்தபோது,-பிணம் கலன் அணிந்தது அன்ன பேர் எழில் பெற்றியான் - பிணத்துக்கு அணிகல னணிந்தாற்போன்று அலங்காரத்தாற் பேரெழில்படைத்த தன்மையுடையனான அந்தக்கீசகன், (காமதாபத்தால்), நெஞ்சு உணங்க - இதயம் வாடவும், நா புலர - நாக்குவரளவும், வந்து-, அ உயர் பொழிலூடு - ஓங்கிய மரங்களைக்கொண்ட அந்தச்சோலையிலே, சேர்ந்தான்-; (எ - று.)- கவிஞர் கீசகனிடத்து அவனது ஒழுக்கக்கேட்டாற் கொண்ட அவமதிப்பினாலும், விரைவில் அந்தக் கீசகன் பிணமாகக்கிடக்கப்போவதனாலும், அவனை, 'பிணங்கலனணிந்ததன்ன பேரெழிற்பெற்றியான்' என்றது. (117) வேறு. 66.-அம்மாளிகையிற்பொற்றுணைச்சேர்ந்திருந்த பெண்ணுருவைக் கண்ட கீசகன் ஆர்வங்கொண்டுகூறலுறுதல். சாந்தினான் மெழுகிய தவளமாளிகை ஏய்ந்தபொற் றூணிடை யிலங்குமின்னெனச் சேர்ந்துறை பெண்ணுருக் கண்டுசிந்தையிற் கூர்ந்தபே ரார்வமோடிறைஞ்சிக் கூறுவான். |
(இ -ள்.) சாந்தினால் - (அரைத்த) சுண்ணாம்பினால், மெழுகிய- பூசப்பெற்றுள்ள, தவளம் மாளிகை - வெண்ணிறமுள்ள மாளிகையிலே, ஏய்ந்த- பொருந்திய, பொன் தூண்இடை - பொற்கம்பத்தினிடத்தை, இலங்கும் மின் என சேர்ந்து-விணங்குகின்ற மின்னல் போலச் சார்ந்து, உறை-வசிக்கின்ற, பெண் உரு-பெண்வடிவத்தை, கண்டு-பார்த்து,(கீசகன்), சிந்தையில் கூர்ந்த பேர் ஆர்வமோடு - மனத்திலே மிகுந்த காதலோடு, இறைஞ்சி - வணங்கி, கூறுவான் - (பின்வருமாறு) சொல்லலானான்; (எ - று.)-கீசகன் ஆர்வமோடு கூறுவதை மேற்கவியிற் காண்க. |