பாரெயிற்றுழுவான்' என்றார். வினை - இங்கே, பிரளயாபத்து நேர்தற்கு ஏற்ற தீவினை. நாமத்துக்கு நன்மை - தன்னை ஒருகால் ஓதியவர்க்கும் உயர்பதம் அளித்தல். தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்னும் பிறப்பேழனுள் முதலைந்தனையுங் கூறி, மற்றையவற்றை உபலக்ஷணத்தாற் பெறவைத்தார்: [உபலக்ஷணமாவது - ஒருமொழி ஒழிந்த தன் இனங்களையும் குறிப்பது.] எலும்பில்லாத உடம்பினதாதலால், 'புன் புழு' எனப்பட்டது; "எழுவகைத் தோற்றத் தின்னாப்பிறப்பி, னென்பொழி யாக்கை" என்றார் பிறரும். தொழுவார், உழுவான் என்பன - இயல்பினால் இறந்தகாலம் எதிர்காலமாகச் சொல்லப்பட்ட காலவழுவமைதிகள். கோலம், வேலா, நாமம், ஸு ரர், நரர் - வடசொற்கள். எயிறு - இங்கே, வக்கிரதந்தம். உழுவானை = உழுவானது; இரண்டனுருபு, ஆறனுருபின் பொருளில் வந்தது; உருபுமயக்கம். 'ஆக' என்ற வினையெச்சம் - இடைச்சொல் தன்மைப்பட்டு, விகற்பப்பொருளில் வந்தது; ஆனதுபற்றியே, இயல்பாயிற்று: அது, எண்ணுப்பொருளும் இங்குக்கொண்டுள்ளது. வழுவாத என்பதனைச் சுரர் முதலிய எல்லாப் பிறவிகளோடுங் கூட்டுக. ஸு ரரென்னும் வடசொல்லுக்கு - திருப்பாற்கடல் கடைந்த காலத்து அதினினின்று உண்டா சுரையை [வாருணி யென்னும் மதுவை] உண்டவரென்பது பொருள். 'பிறந்தாலும்' என்ற எதிர்மறையும்மை, அவர்கட்குப் பிறப்பின்மையை விளக்கிநின்றது. காணும் தேற்றப்பொருளதாய் வந்த முன்னிலை யிடைச்சொல். இதுமுதற் பதினைந்து கவிகள் - பெரும்பாலும் முதல் நான்கு சீரும் மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி நான்குகொண்ட கலிநிலைத்துறைகள். (160) 2.-கவிக்கூற்று: துரியோதனன்நிரைகவர்செய்தியைக் கூறுவேனெனல். மூதாரழற்பாலைவனமுந்தடஞ்சரரன்முதுகுன்றமும் சூதாடியழிவுற்றடைந்தோர்கள்சரிதங்கள்சொன்னோமினிப் பாதாரவிந்தத்துமருவார்விழக்கொண்டுபாராளும்வெங் கோதார்மனத்தோன்விராடன்ற னிரைகொண்டகோள்கூறுவாம். |
(இ -ள்.) சூது ஆடி - (துரியோதனனுக்கு மாமனான சகுனியுடனே) சூதாட்டமாடி, அழிவு உற்று - (அந்த ஆட்டத்தில்) தோல்வியடைந்து, (அதனால்), முது ஆர் அழல் பாலைவனம்உம் - பழமையாக [இயற்கையாகவே] மிக்க வெப்பமுள்ள பாலைநிலங்களையுடைய காடுகளையும், தட சாரல் முதுகுன்றம்உம் - பெரிய சாரல்களையுடைய பழமையான மலைகளையும், அடைந்தோர்கள் - அடைந்து வசித்த பாண்டவர்களுடைய, சரி தங்கள் - அஞ்ஞாதவாசக்காலத்து நடந்த வரலாறுகள் சிலவற்றை, சொன்னோம் - (யாம் கீழ்க்) கூறினோம்; இனி - இனிமேல், பாத அரவிந்தத்து - (தனது) தாமரைமலர் |