குந்தித் தெரிவை நிறைமாமதிக் கூட்ட முற்ற அந்தித் தெரிவை நிகரென்ன வழகின் மிக்காள். |
(இ-ள்.) வந்தித்த - (தான் மந்திரத்தினால்) வணங்கிய, தெய்வம்-, எதிர் வந்தஉழி - எதிரேவந்தபோது, குந்தி தெரிவை - குந்தியென்ற பெண்,- மன்னு - பொருந்திய, கேள்வன்- (தன்) கணவனை, சிந்தித்த - எண்ணிய, சிந்தையினள் ஆய் - எண்ணமுடையவளாய்,- மலர் சேக்கை சேர்ந்து - மலர்ப்படுக்கையிற் சேர்ந்திருந்து,- நிறை மா மதி கூட்டம் உற்ற - பதினாறுகலைகளும் நிரம்பிய சிறந்த சந்திரனோடு சேர்தலைப்பொருந்திய, அந்தி தெரிவை நிகர் என்ன - மாலைச் சந்தியாகிய பெண்ணுக்கு உவமையாவளென்னும்படி, அழகில் மிக்காள் - அழகினால் மேம்பட்டவளானாள்;(எ-று.) (221) வேறு. 67.- தருமபுத்திரன் பிறத்தல். சிவமுற முகூர்த்தம் வாரந் தினந்திதி காரணம் யோகம் நவமென வழங்கு கோளு நன்னிலை நின்ற போதில் அவனியை யொருகோ லோச்சி யாளுமென் றறிவின் மிக்க தவநெறி முனிவர் கூறப் பிறந்தனன் றருமன் மைந்தன். |
(இ-ள்.) முகூர்த்தம் - முகூர்த்தமும், வாரம்-வாரமும், தினம் - நட்சத்திரமும், திதி - திதியும், கரணம் - கரணமும், யோகம் - யோகமும், (ஆகிய இவை), சிவம் உற - மங்களகரமாகப்பொருந்த,- நவம் என வழங்கும் - ஒன்பது என்று சொல்லப்படுகின்ற, கோள்உம் - கிரகங்களும், நல் நிலை நின்ற போதில் - நன்மையைத்தரக்கூடிய இடத்திலிருக்கையில்,-அவனியை ஒரு கோல் ஓச்சி, ஆளும் என்று அறிவின் மிக்க தவம் நெறி முனிவர் கூற - இந்தப்பூமியை (த் தன்) ஒப்பற்ற செங்கோலைச் செலுத்தி ஆள்வான் என்று அறிவினால் மிக்க தவநெறியையுடைய முனிவர் சொல்ல,- தருமன் மைந்தன் பிறந்தனன் - தருமபுத்திரன் பிறந்தான்; (எ-று.) பாவஞ்செய்வாரை நரகத்திற்செலுத்தித் தருமத்தை நிலை நிறுத்தலால், யமன் தருமன் எனப்படுவான்; இந்த மகன் அந்தத் தருமனுடைய அருளாற் பிறந்தவ னாதலால், இவனைத் தருமபுத்திரனென்றே உலகோர் வழங்குவர்: இவன் பெயர், யுதிஷ்டிரன்: இவன், ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் பஞ்சமியன்று கேட்டை நட்சத்திரத்தில் அபிசித்திற் பிறந்தா னென்று முதனூல். இனி முப்பத்துமூன்று கவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைய மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய விருத்தங்கள். (222) 68.- யுதிஷ்டிரன் பிறந்தபோது நன்னிமித்தம் தோன்றுதல். உதிட்டிரன்பிறந்தகாலை யுலகினிலுயர்ந்தோர்யாரும் வதிட்டனைமுதலாவெண்ணு முனிவரும்வானுளோரும் நிதிப்பயன்பெற்றார்போல, நேயமோடுவகைகூர்ந்தார் மதித்தநன்னிமித்தம்யாவு மங்கலநிகழ்ந்தவன்றே. |
|