சூரியனாலும், சதம் இதழாலும் - (தான் பெற்றுள்ள) நூறுஇதழ்களாலும், செம் பொன் கன்னிகையால்உம் - செம்பொன்னிறமான பொகுட்டாலும், சோதி கலந்த - ஒளிபொருந்திய, செம் கமலம் - செந்தாமரையை, போன்றாள் - ஒத்தாள்;(எ-று.) சதவிதழ் புதல்வர்க்கும், கன்னிகை புதல்விக்கும், பரிதி மகிழ்நனுக்கும், கமலக்கொடி காந்தாரிக்கும் உவமை யெனக் காண்க. கன்னிகை - கர்ணிகா: தாமரைப்பூவினிடையிலுள்ள பொகுட்டு எனப்படும்உறுப்பு. பாலபாரதத்தில் "ஸு ப லஸ்ய கந்யகா ஆமுக்த பார்ச்வஸ்திதி ராத்மஜைர்பபௌ - சதேநபத்ரை ரிவபத்மகர்ணிகா" என்று காந்தாரிக்குக் கர்ணிகையும், புதல்வர்கட்கு இதழ்களுமே உவமையாகக் கூறப்பட்டுள்ளன. (236) 82.-மீண்டும் பாண்டுவின் ஏவற்படி மந்திரத்தாற் குந்தி இந்திரனையெண்ண, அவன் அவளைக் கூடுதல். பான்மொழிக்குந்திமீண்டும் பாண்டுவினேவல்பெற்று வான்மொழிமறையாலுன்னி வானவர்க்கரசைநோக்க மேன்மொழிவதுமற்றென்கொல் விடுவனோவிரைவின்வந்து தேன்மொழித்தெரிவைமெய்யுஞ் சிந்தையுங்களிக்கச்சேர்ந்தான். | (இ - ள்.) பால் மொழி குந்தி - பால்போலினிய பேச்சையுடைய குந்தியென்பாள், மீண்டும்உம் - மறுபடியும், பாண்டுவின் ஏவல்பெற்று - பாண்டுமன்னவனுடைய ஏவலையடைந்து, வான் மறை மொழியால் - சிறந்த வேதமந்திரச் சொல்லால், வானவர்க்கு அரசை உன்னி நோக்க - தேவேந்திரனை (மனத்தினாற்) சிந்தித்துப்பார்க்க,- மற்று- இனி, மேல் மொழிவது என்கொல் - (நாம்) மேலே நிகழ்ந்ததைச் சொல்லவேண்டுமோ? விடுவன்ஓ - (மறைமொழியாற்சிந்தித்து நோக்கியபின் அந்தத்தேவேந்திரன் வாராது) விடுவனோ? விரைவின் வந்து-, தேன் மொழி தெரிவை - தேன்போன்ற பேச்சையுடைய அந்தப்பெண்ணின், மெய்உம்சிந்தைஉம்களிக்க-, சேர்ந்தான்-; (எ-று.)- ' 'வந்தத்தேன்மொழி' எனவும் பாடம். (237) 83.- பங்குனியுத்தரத்தில் அருச்சுனன் பிறத்தல். எங்குநன்னிமித்தஞ்செல்ல விருநிலமகிழ்ச்சிகூரப் பங்குனிநிறைந்ததிங்க ளாதபன்பயிலுநாளில் வெங்குனிவரிவில்வாகை விசயனும்பிறந்தான்வென்றிப் பங்குனனென்னுநாமம் பகுதியாற்படைத்திட்டானே. |
(இ - ள்.) எங்குஉம் - எல்லாவிடத்திலும், நல் நிமித்தம் செல்ல- நல்ல நிமித்தங்கள்தோன்றவும்,இரு நிலம் மகிழ்ச்சிகூர - பெரிய நிலவுலகத்திலிருப்பவர் மகிழ்ச்சி மிகவும், பங்குனி - பங்குனிமாதத்தில், நிறைந்த திங்கள் - பதினாறுகலைகளோடும் நிரம்பிய சந்திரனைக் கொண்ட, ஆதபன் பயிலும் நாளில் - சூரியன் தோன்றிய நாளில் [பங்குனியுத்தரநாளில்], வெம் குனி வரி வில் வாகை விசயன்உம் - கொடிய வளையுந்தன்மையுடைய கட்டமைந்த வில்லை யேந்திய வாகைப்பூமாலையைச் சூடிய அருச்சுனனும், பிறந்தான்-: வென்றி பங்குனன் என்னும் நாமம் - வெற்றியையுடைய பல்குனன் என்னும் |