அந்த அடிமைத் தன்மையினின்று தம்மை விடுவித்துக்கொள்ளுமாறு கருடன் அந்நாகங்களின் மொழிப்படியே அமிருதத்தைக் கொணர்ந்ததோடு, அந்நாகங்களை யுண்ணுமாறும் தேவேந்திரனிடம் வரம்பெற்று வந்து அடிமையினின்று நீங்கி, அந்நாகங்களை அமிருதத்தை யுண்ணும் பொருட்டு நீரில்மூழ்கிவருமாறு தந்திரமாகச்சொல்ல, அவ்வேளையில் தேவேந்திரன் அமிருதத்தைக் கவர்ந்து சென்றான்: பிறகு அமிருதகலசம் வைத்திருந்த தர்ப்பையை நக்கியதனால் அந்நாகங்களின் நாக்குப் பிளவுண்டன என்ற சரித்திரமும், ஒருகால் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தம்முள் யார் பலசாலியென்று விவாதமுண்டாக, அப்போது தனது ஆயிரம்படங்களாலும் ஆதிசேஷன் மேருவின் ஆயிரங்கொடுமுடிகளையும் கவிந்துகொண்டு நிற்க, வாயுபகவான் அந்த மேருவின் ஆயிரஞ்சிகரங்களுள் மூன்று சிகரங்களைப் பறித்திட்டான் என்பதும் இங்கு அறியத்தக்கன. இச்செய்யுள் - முதற்சீர் மாச்சீரும் ஈற்றுச்சீர் காய்ச்சீரும் மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரியவிருத்தம். (274) சம்பவச்சருக்கம் முற்றிற்று. --- மூன்றாவது வாரணாவதச் சருக்கம். வாரணாவத மென்ற ஊரில் நடந்த செய்தியைச் கூறுகின்ற சருக்கமென்று பொருள். இச்சருக்கத்தின் முதல் நூற்றெட்டுப்பாடல்கள் வரையில் பாண்டவ துரியோதனாதியர்களது இளம் பருவத்து நிகழ்ச்சிகள் பலவற்றை எடுத்துக்கூறி, அதன்பின், துரியோதனாதியர் பாண்டவரை வாரணாவதநகரத்துக்குச் செலுத்தின செய்தியைக் கூறுகின்றார்: அதனால், இப்பெயர் தலைமைபற்றி வந்த தென்க. 1.- தெய்வவணக்கம். அருமறை முதல்வனை யாழி மாயனைக் கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனைத் திருமக டலைவனைத் தேவ தேவனை இருபத முளரிக ளிறைஞ்சி யேத்துவாம். |
(இ-ள்.) அரு மறை முதல்வனை - அறிதற்கு அரிய வேதங்களின் முதலாகவுள்ளவனும், ஆழி மாயனை - சக்கராயுதத்தையேந்திய மாயவனும், கரு முகில் வண்ணனை - காளமேகம்போன்ற திருநிறமுடையவனும், கமலம் கண்ணனை - செந்தாமரைமலர்போலுந் திருக்கண்களையுடையவனும், திருமகள் தலைவனை - இலக்குமிக்கு நாயகனும், தேவ தேவனை - தேவர்களுக்கெல்லாம் ஆதி தேவனுமான திருமாலை, இரு பதம் முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்- உபய திருவடித்தாமரைமலர்களை வணங்கித் துதிப்போம்; (எ-று.) வேதங்களிற்கூறப்பட்ட முதற்பொருளாகுபவனும், வேதங்களை முதலில் வெளியிட்டவனும்இவனேயென்பது, 'மறைமுதல்வன் என்பதன் கருத்து. மாயன் - மாயையையுடையவன்; மாயை |