பக்கம் எண் :

152பாரதம்ஆதி பருவம்

13.-பாதாளஞ்சென்ற வீமனை அங்குள்ள நாகங்கள்
கடித்தல்.

ஓதவான்கடலிடை யொளித்தவெற்பெனப்
பாதலந்தனில்விழு பவனசூனுவை
வேதனைப்படுத்தினர் விடங்கொள்கூரெயிற்று
ஆதவப்பணமணி யரவினஞ்சிறார்

     (இ-ள்.) ஓதம் வான் கடலிடை ஒளித்த வெற்பு என - அலைகளையுடைய
பெரியகடலிலே மறைந்த மலைபோல, பாதலந்தனில் விழு - (கங்காநதியிலுள்ள
பிலத்துவாரத்தின் வழியாய்ப்) பாதாளலோகத்திற் போய்விழுந்த, பவன சூனுவை
- வாயுகுமாரனான வீமனை,- (அங்குள்ள), விடம்கொள் கூர் எயிறு -
விஷம்பொருந்திய கூரிய பற்களையும், ஆதவம் பணம் மணி - சூரியகாந்திபோல
விளங்குகிற படத்திலுள்ள மாணிக்கத்தையுமுடைய, அரவின் அம்சிறார் -
நாகர்களின் அழகிய பிள்ளைகள் [பாம்புக்குட்டிகள்], வேதனைப்படுத்தினர் -
கடித்துவருத்தினார்கள்; (எ-று.)

     ஆதவம்= ஆதபம்; வெயில். நாகராவார் - படமும் வாலுமுடையராய்
மனிதவடிவமுந் தெய்வப்பிறப்புமானதொரு சர்ப்பசாதியார்.            (287)

14.-அப்பாம்புகளின் விஷத்தால் முந்தின விஷம்
நீங்குதல்.

முற்படுகொடுவிட முளையெயிற்றுகும்
பிற்படுவிடத்தினாற் பெயர்ந்துபோதலின்
மற்படுபுயகிரி வடப்பிணிப்புமற்று
அற்படுமிருள்புல ரலரியாயினான்.

     (இ-ள்.) முன் படு கொடு விடம் - (வீமனுடம்பில்) முன்பு பொருந்திய
கொடிய (உணவின்) விஷம், முளை எயிறு உகும் பின் படு விடத்தினால் -
(சிறுநாகங்களின்) முளைத்த பற்களினின்று சொரிந்த பிந்தின விஷத்தால்,
பெயர்ந்து போதலின் - நீங்கிப் போனதனால்,- (வீமன்),- மல் படு புயம் கிரி
வடம் பிணிப்புஉம் அற்று- வலிமை மிக்க மலைகள்போன்ற (தனது) தோள்களிற்
கயிற்றாற்கட்டிய கட்டும் (தனது உடல்வலிமையால்) துணிபடப்பெற்று, அல் படும்
இருள் புலர் அலரி ஆயினான் - இரவில் உண்டாகும் இருளைக்கெடச்செய்த
சூரியன் போன்றான்; (எ-று.)

     கொடுவிடமும் கடும்பிணிப்பும் அற விளங்கிய வீமனுக்கு, இருளறவிளங்கிய
சூரியனை உவமைகூறினார். ஸ்தாவரவிஷமான நஞ்சுணவிற்குச் சங்கம விஷமான
அரவினங்கடித்துஏற்றிய விஷம் மாற்றாயிற்றென்க. புயகிரி -
முன்பின்னாகத்தொக்க உவமத்தொகை. 'முனையெயிற்று' என்றும் பாடம். (288)

15.- வீமனுக்கு வாசுகி அன்போடு அமிருதமூட்டுதல்.

வாசுகிதனக்கிவன் வரவுணர்த்தலும்
ஆசுகன்மதலையென் றறிந்துமற்றவன்
தேசுறுபொற்குடந் தெரிந்துபத்தினால்
ஏசறுமமுதெலா மினிதினூட்டினான்.