45. | புகன்றபடிநீயாளும் புவியும்பாதிகொள்வேன் இகன்றசமரிலுன்னை யிரதத்துடனேகவர்வேன் அகன்றமெய்ம்மையுடையா யறிதியென்றேனென்று சுகன்றன்ஞானம்பெற்ற துரோணன்சொல்லக்கேட்டான். |
(இ -ள்.) அகன்ற மெய்ம்மை உடையாய் - நீங்கின உண்மை யுடையவனே! புகன்ற படி- (நீ முன்பு எனக்குச்) சொன்னபடி, நீ ஆளும் புவிஉம் பாதி கொள்வேன் - நீ அரசாளும் நாட்டிலும் பாதியைக் கைக்கொள்வேன்: (அன்றியும்), இகன்ற சமரில் - பகைமை கொண்டுசெய்யும் போரில், உன்னை இரதத்துடனே கவர்வேன் - உன்னைத் தேர்க்காலுடனே கட்டிக் கைக்கொள்வேன்; அறிதி - (இதனை) அறிவாய், என்றேன் - என்று சொல்லிச் சபதஞ்செய்தேன், என்று-, சுகன்தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல - சுகமுனிவனுக்குஉள்ள தத்துவ ஞானம்போன்ற தத்துவஞானத்தைப்பெற்றவனான துரோணாசாரியன் சொல்ல, கேட்டான் ;(எ-று.) அகன்றமெய்ம்மையுடையாய் என்றது, வடமொழிநடை; சத்தியத்தை விட்டவனே யென்று கருத்து. துரோணன் தன் வரலாறு கூறும்முகத்தால், தான் அந்நகரியிலிருக்க உடன்பட்டதைக் குறிப்பித்தானென்க. சுகன் - வியாசமுனிவனது புத்திரன்: அவ்வியாசபகவானின்மேம்பட்டவைராக்கியத்தையும் உண்மையுணர்வையும் உடையவன்; பகவானது அமிசமானவன்; பரமபாகவதர்களில் ஒருவன்; சுகப்பிரஹ்மமென்று சிறப்பித்துக் கூறப்படுபவன். "சுகனிகர் துரோணனொடு" என்பார், மேற்பதின்மூன்றாம்போர்ச் சருக்கத்திலும். 46.-கௌரவ பாண்டவரை வீடுமன் துரோணனிடம் ஒப்பித்தல். கேட்டவரசனழைக்கக் கிருபனுடன்வந்திறைஞ்சும் பூட்டுவரிவிற்றடக்கைப் புதல்வர்புதல்வர்தம்மைக் காட்டிநீயேயிவரைக் கடிதிற்படைமைக்கல்வி மூட்டிநின்வஞ்சினமு முடித்தியென்றுமொழிந்தான். |
(இ - ள்.) கேட்ட - (இங்ஙனந் துரோணன் சொல்லக்) கேட்ட, அரசன் - வீடுமன், அழைக்க - வரவழைத்ததனால், கிருபனுடன் வந்து இறைஞ்சும் - (ஆசிரியனாகிய) கிருபாசாரியனுடனே வந்து வணங்கின, பூட்டு வரி வில் தட கை புதல்வர் புதல்வர்தம்மை - நாணேற்றிய கட்டமைந்த வில்லையேந்திய பெரிய கையையுடைய தனது பேரப்பிள்ளைகளை, காட்டி - (அவ்வீடுமன் துரோணனுக்குக்) காண்பித்து, 'நீயேஇவரை கடிதில் படைமை கல்வி மூட்டி - (இனி) நீயே இவர்களுக்கு விரைவில் ஆயுதவித்தையைக் கற்றுக் கொடுத்து, நின் வஞ்சினம்உம் முடித்தி - (இவர்களைக்கொண்டு) உன்சபதத்தையும் முடித்துக்கொள்வாய்,' என்று மொழிந்தான் - என்ற சொன்னான்; (எ-று.) புதல்வர் புதல்வர் - தன் தம்பியாகிய விசித்திரவீரியனது குமாரர்களாகிய திருதராட்டிரன் பாண்டுஎன்பவரது புத்திரர்கள். படைமை, 'மை' - பகுதிப்பொருள் விகுதியாம். வஞ்சினம் - துருபதனரசிற் பாதிகொள்ளலும், அவனை உயிரோடு கட்டிக்கொணர்தலும். |