(இ-ள்.) அங்குலிகம்ஒன்று - மோதிரமொன்று, புனல் ஆழ் தரு கிணற்றில் - ஆழ்ந்தநீரையுடையதொரு கிணற்றிலே, விழ - விழுந்திட,- அந்தமுனி - துரோணாசாரியன், தேடுமின் என - (குருகுல குமாரரை நோக்கி அதனை நீங்கள்) தேடியெடுங்களென்றுசொல்ல, -(மற்றையோரால் இயலாமற்போகவே), இவன் புங்கமொடு புங்கம் உற எய்து எடுத்தமை - அருச்சுனன் அம்புடனே அம்பு பொருந்தும்படி பாணப்பிரயோகஞ்செய்து (அதனால் இம்மோதிரத்தை) எடுத்தமைக்கு, புகன்று - மகிழ்ந்து,- (துரோணன் பின்பு), அருகு நின்றவரை - பக்கத்தில்நின்ற அம்மாணாக்கரனைவரையும்நோக்கி, 'நீர் - நீங்கள், இங்கு - இங்குஉள்ள, இதன் - இந்த ஆலமரத்தினது, இலை தொகைகள் யாஉம் - இலைகளையெல்லாம், உருவ - ஊடுருவித்துளைக்கும்படி, பகழி ஏவுமின் - அம்புதொடுங்கள்', எனாமுன் - என்று கட்டையிடும்முன்னே [கட்டளையிட்டவுடனே, விரைவில் என்றபடி], (மற்றையோரால் ஆகாமற்போகவே), விசயன் - அருச்சுனன், துங்கம் வில் வளைத்து - சிறந்த (தனது) வில்லைவளைத்து, இலக்கு இல் தொடையால் - எதிரில்லாத அம்பைஎய்து அதனால், ஒரு கணத்தினில் வடத்து இலை துளைத்தனன் - ஒருகணப்பொழுதிலே அவ்வால மரத்தின் இலைகளெல்லாவற்றையும் துளைப்படுத்தினான்; (எ -று.) பாஞ்சாலனோடு மாறுபட்ட துரோணாசாரியன் அத்தினபுரியில் பிறரா லறியப்படாது வசிக்கையில், ஒருகால் விளையாடச்சென்ற குருகுலக்குமரர் கிணற்றில் வீழ்ந்திட்ட மோதிரம் பந்து இவைகளை யெடுக்கத் தெரியாமல் விழிக்க, அருகு இருந்த இந்தத்துரோணன் தான் கற்ற இஷீகாஸ்த்திரத்தின் வல்லமையால் அவற்றையெடுக்க, அவர்கள் வியப்புற்றுப் பணிந்து அவரை இன்னாரென்று அறிந்து வீடுமனிடம் தெரிவிக்க, பின்பு ஆசிரியரானாரென்பதும்: மாணாக்கர்க்குப் பயிற்சிமுற்றியபின் ஒருகால் ஒருமரத்தில் பாஸமென்ற பட்சியையமைத்து அந்தக் குருகுலக்குமரரை யெய்யுமாறு துரோணாசார்யர் கட்டளையிட, எய்யவேண்டிய நிலையில் மற்றையோர் மரத்தையும் குருவையும் உடன்காண்பதாக ஆசிரியரிடஞ்சொல்லி ஆசிரியரால் அவமதிப்புப்பெற, அருச்சுனன்மாத்திரம் எய்யும் நிலையில் பாஸபட்சியின் சிரசையே காண்பதாகக்கூறி ஆசிரியரின்கட்டளைப்படி இலட்சியத்தை வீழ்த்தினா னென்பதும் வியாசபாரதத்திலுள்ளவை: இப்பாடலிற்குறித்தவை பாலபாரதத்திலில்லை. அங்குலிகம் - அங்குலீயக மென்றவடசொல்லின் திரிபு; விரலில் அணியப்படுவ தென்பது அவயவப்பொருள்: அங்குலி - விரல். புங்கம், துங்கம், வடம் - வடசொற்கள். (325) 52.-அருச்சுனன் துரோணனை முதலையினின்று உய்வித்தல். முத்திமுனிதாளிணையை நீர்படிதடந்துறையின் முதலைகவர்வுற்ற தெனலுஞ், சித்திரவில்வீரர்பலருந் தமவெறுங்கையொடுசென்றருகு நின்றுவிடவே, பத்தியின்விரைந்து பொதுவேயிபமழைக்கவொரு பற வைமிசைவந்தநெடுமால், கைத்திகிரிபோற்கணையின் விசயனதனைப்பழையகார் முதலையிற்றுணிசெய்தான். |
|