காட்சிகளைவிளைத்தன னென்க. மகவாந் என்ற வடசொல் - யாகங்களை யுடையவனென்று பொருள்படும்; நூறு அசுவமேதயாகங்களைச் செய்து இந்திர பதவிபெறுதலால் அவனுக்கு இப்பெயர். வேறு. 61.- அப்பொழுது கர்ணன் எழுந்து சிங்கநாதஞ் செய்தல். மங்குல் சூழ்வி மான முன்றின் மஞ்ச கோடி திகழவே அங்கண் வான மீன மென்ன வவையிருந்த வரசர்முன் சிங்க மென்னு மாறெ ழுந்து சிங்க நாத முஞ்செய்தான் பங்க சாத பரிம ளங்கொள் பானு ராச சூனுவே. |
(இ-ள்.) மங்குல் சூழ் விமானம் முன்றில் - மேகங்கள் படியப் பெற்ற (மேல்நிலையையுடைய) மண்டபத்தின் முன்னிடத்திலுள்ள, மஞ்சம் கோடி - மஞ்சங்களின் வரிசை, திகழ - (தாம்வீற்றிருத்தலால்) விளங்கும்படி, (அந்த மஞ்சங்களில்), அம் கண் வானம் மீனம் என்ன - அழகிய இடத்தையுடைய வானத்திற்பொருந்திய நக்ஷத்திரங்கள் போல,அவை இருந்த -சபையாகத் திரண்டு வீற்றிருந்த, அரசர் முன் - அரசர்களுடையமுன்னிலையிலே,- பங்கசாதபரிமளம்கொள் பானுராச சூனு - தாமரைமலர்களை மலர்த்துந்தன்மையுள்ள சூரியனாகிய தலைவனது மகனான கர்ணன்,- சிங்கம் என்னும் ஆறு எழுந்து - சிங்கம் (தனக்கு உவமை) என்று சொல்லும்படி (கம்பீரமாக) எழுந்து, சிங்கநாதம்உம் செய்தான் - சிங்கநாததத்தையுஞ் செய்தான்; சிங்கநாதத்தையுஞ் செய்தான்; இங்கே, விமானம் - மண்டபத்தின் மேல்நிலையையும், முன்றி லென்றது - வடமொழியில் ப்ரேக்ஷாகார மெனப்படும் காட்சிச்சாலையின் முன்னிடத்தையும் காட்டும். அலர்த்தலாகிய காரணம், பரிமளங் கொள்ளுதலாகிய காரியமாக உபசரிக்கப்பட்டது. பரிமளங்கொள் பாநு - தாமரைகள் மலர்ந்து வாசனைவீசுதற்குக் காரணமாகுஞ் சூரிய னென்க. ஓர் உத்தமபுருஷன் உயர்ந்த பதுமினி சாதிஸ்திரீயின் மேனிநறுமணத்தை மோந்து உட்கொள்ளல் போல, சூரியனாகிய தலைவன் தனது தலைவியாகிய தாமரையின் மணத்தைக் கொள்ளுகின்றனனென்பது தொனிக்கும். கோடி, ஸிம்ஹநாதம், பங்கஜாத பரிமளம், பாநுராஜஸூநு - வடமொழித்தொடர்கள். 'விசாலமுன்றில்' என்றும் பாடம். இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று விளச்சீரும், மற்றையாறும் மாச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள். இவற்றை, முதல் ஆறு சீர்களையும் மூன்று பெருஞ் சீராகப் பிரித்துக் கலிவிருத்த மென்னவேண்டுமென்பது, ஒருசாரார் கொள்கை. (335) 62.-அருச்சுனனினும் சிறப்பாகக் கர்ணன் தனது வில்திறங்காட்டுதல். சிந்தையன்புடன்பணிந்து தேசிகேசனருளினால் வந்துவெஞ்சராசனம் வணக்கிவீரவாளியால் இந்திரன்குமாரன்முன் னியாதியாதியற்றினான் அந்தவந்தநிலையுமேவு மவனின்விஞ்சலாயினான். |
|