பக்கம் எண் :

182பாரதம்ஆதி பருவம்

     (இ-ள்.) தேசிக ஈசன் அருளினால் வந்து - (அவ்வரங்கிற்குத் தலைவனாக
விளங்கும்) குருசிரேஷ்டனான அந்தத் துரோணனது அனுமதிபெற்று (அதனால்)
வந்து, சிந்தை அன்புடன் பணிந்து - (அவனை) மனப்பூர்வமான பக்தியோடு
வணங்கி, வெம் சராசனம் வணக்கி - கொடிய வில்லை வளைத்து,-
இந்திரன்குமாரன் முன் வீரவாளியால் யாது யாது இயற்றினான் அந்த அந்த
நிலைஉம் ஏஉம் அவனின் விஞ்சல் ஆயினான் - இந்திரனது மகனான
அருச்சுனன் முன்பு திறமையுடைய அம்புகளால் எந்தெந்தவகைத்தொழிலைச்
செய்தானோ அததற்குஉரிய நிலையிலும் அந்தந்த அம்பைச் செலுத்துதலிலும்
அவ்வருச்சுனனினும் மேம்படுதலை உடையவனானான்; (எ-று.)

     "அர்ச்சிதேந குருணாநுமோதிதோ - தாரயந் தநு ரதிஜ்யதாம் கதம்
அத்புதம் வ்யதித யத்யத் அர்ஜு ந:- தத்த தப்யதிகம் ஆததாந ஸ:" என்ற
பாலபாரதத்தை யொட்டி இப்போது கூறிய பொருளே யேற்றதாதலறிக.
தேசிகன் -பரசுராமனென்பாருமுளர்.

63.-அதுகண்டு அனைவரும்வியக்கத் துரியோதனன்களிக்க
அருச்சுனன்நாணுதல்.

கணைகள்போயிலக்கடைந்தவுறுதிகண்டுகண்களித்து
இணையில்வீரனென்றதன்றிருந்தராசமண்டலம்
பிணையன்மாலைவிசயனண்ணல்பெற்றிபற்றிநாணினான்
துணைவரோடுவரிகழற்சு யோதனன்களிக்கவே.

     (இ-ள்.) கணைகள் - (கர்ணனுடைய) பாணங்கள், போய் - சென்று, இலக்கு
அடைந்த- (குறித்த) இலக்கில் தவறாதுபட்ட, உறுதி - திறத்தை கண்டு -
பார்த்து,- அன்று இருந்த ராசமண்டலம் - அப்பொழுது (அச்சபையில்) இருந்த
அரசர்களதுதிரள், கண்களித்து - கண்கள் களிப்பப்பெற்று, இணை இல் வீரன்
என்றது- (அவனை) ஒப்பற்றவீரனென்று கொண்டாடிற்று: (அதனால்), வரி கழல்
சுயோதனன் - கட்டிய வீரக்கழலையுடைய துரியோதனன், துணைவரோடு -
(தனது) தம்பிமார்களுடனே, களிக்க - களிப்படைய,- பிணையல் மாலை விசயன்
- பின்னல்மாலையைத் தரித்த அருச்சுனன், அண்ணல் பெற்றி பற்றி நாணினான்
- பெருமையிற்சிறந்தவனான அக்கர்ணனது திறமையைக்குறித்து
வெட்கமடைந்தான்; (எ-று.)

     "தம்மினுங், கற்றாரைநோக்கிக் கருத்தழிக கற்றவெல்லாம், எற்றேயிவர்க்கு
நாமென்று" என்றபடி, வில்திறத்தில் தேர்ந்த அருச்சுனன் தன்னினும் மேம்பட்ட
கர்ணனதுதிறத்தைக் கண்டு நாணங்கொண்டன னென்க. இலக்கு= லக்ஷ்யம்.
அண்ணல் - (தனது) தமையன் எனக்கொள்ளினுமாம்.                  (337)

64.-கர்ணன் அருச்சுனனைத்தன்னோடு தொந்தயுத்தஞ்
செய்யஅழைத்தல்.

மருவநின்றருக்கன்மைந்தன்வானநாடன்மகனைநாம்
இருவருந்தனுக்கொள்போரியற்றவம்மினென்றலும்
குருகுலந்தழைக்கவந்தகுமரனன்புகூரவே
உருகிநன்றெனத்தழீஇயுகந்துளந்தருக்கினான்.