(இ-ள்.) அருக்கன் மைந்தன் - சூரியபுத்திரனான கர்ணன், மருவநின்று - சமீபமாக வந்துநின்று, வானநாடன் மகனை - தேவலோகத்துக்குத் தலைவனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனனைநோக்கி, நாம் இருவர்உம் தனுகொள் போர் இயற்ற வம்மின் என்றலும்- 'நாம் இரண்டுபேரும் விற்போர்செய்யுமாறு (நீர்) வருக' என்று கூப்பிட்டவளவிலே,- குருகுலம் தழைக்க வந்த குமரன் - குருவென்னும் அரசனது குலம் செழிக்கும்படி பிறந்த மகனான துரியோதனன், அன்பு கூர - அன்புமிக, உருகி - (அந்தக்கர்ணன் விஷயத்தில்) மனவுருக்கங்கொண்டு, நன்று என - இதுநல்லதென்று (அவன்செயலைக்) கொண்டாடி, தழீஇ - (அவனைத்) தழுவியணைத்து, உளம் உகந்து - மனமகிழ்ந்து, தருக்கினான் - பெருமை பாராட்டினான்; (எ -று.) துரியோதனனை 'குருகுலந்தழைக்கவந்த குமரன்' என்றது, நூற்றுவரெனத்தொகையால் மிக்கதனாலேயே யென்க. (338) 65.- அருச்சுனனுக்கும்கர்ணனுக்கும் நிகழும் வீரவார்த்தை. அனந்தரம்பொரற்குநீகொலந்தரம்மெனக்கெனாத் தனஞ்சயன்செயிர்த்தல்கண்டுதபனன்மைந்தன்மீளவும் முனைந்தபோரின்முடிதுணித்துன்முகசரோருகத்தினால் சினந்தணிந்தரங்கபூசைசெய்வனென்றுசீறினான். |
(இ-ள்.) அனந்தரம் - பின்பு, தனஞ்சயன் - அருச்சுனன், (கர்ணனைநோக்கி), 'பொரற்கு - போர்செய்தற்கு, நீ கொல் எனக்கு அந்தரம் - நீயாஎனக்கு எதிர்? ' எனா - என்றுசொல்லி, செயிர்த்தல் - கோபித்தலை, கண்டு - பார்த்து,- தபனன் மைந்தன் - சூரியபுத்திரனான கர்ணன்,- மீளஉம் - பின்பும், 'முனைந்த போரில் - பகைத்துச் செய்யும் போரிலே, முடி துணித்து - (உன்) தலையை வெட்டி, சினம் தணிந்து- (அதனால் எனது) கோபமாறி, உன் முக சரோருகத்தினால் -உனது முகமாகிய தாமரைமலரைக்கொண்டு, அரங்கபூசை செய்வன்- யுத்தரங்கத்துக்குப் பூசைசெய்வேன், ' என்று - என்று சொல்லி, சீறினான் - மிகவுங் கோபித்தான்; (எ-று.) தருமபுத்திரன் இராசசூயயாகஞ் செய்யவேண்டியபொழுதில், அருச்சுனன் வடக்கிற்சென்று பல அரசர்களைச் சயித்து அவர்கள் செல்வத்தைத் திறைகொணர்தலால், அவனுக்குத் தநஞ்சய னென்று ஒருபெயர்; இனி, இப்பெயர்க்கு - வெற்றியைச் செல்வமாகவுடையவனென்றும் ஒருபொருள் கொள்ளலாம். ஸரஸ் + ருஹம்= ஸரோருஹம்; குளத்தில் முளைப்பது: தாமரைக்குக் காரணவிடுகுறி. 66.-அதுகண்டு அனைவருந் திகைக்கக் கிருபன் நீதிகூறத் தொடங்குதல். அதிருகின்றவெழிலிபோலருச்சுனன்றனைக்குறித்து எதிருகின்றவின்மைகண்டியாவருந்திகைக்கவே முதிருகின்றமெய்யனாகிமுன்னிருந்தகௌதமன் உதிருகின்றவமுதவிந்துவொக்குமென்னவுரைசெய்வான். |
(இ-ள்.) அதிருகின்ற எழிலி போல் - இடிமுழங்குகின்ற மேகம் போல, அருச்சுனன்தனை குறித்து எதிருகின்ற - அருச்சுனனைக் |