குறித்து (க் கர்ணன்) எதிர்த்து நிற்கிற, வின்மை - வில்வலிமையை, கண்டு - பார்த்து, யாவர்உம் - எல்லோரும், திகைக்க - பிரமித்து நிற்க, - முதிருகின்ற மெய்யன் ஆகி முன் இருந்த கௌதமன் - மூப்படைந்த உடம்பையுடையவனாய் (அச்சபையில்) முன்னே வீற்றிருந்த கிருபாசாரியன், உதிருகின்ற அமுத விந்து ஒக்கும் என்ன உரைசெய்வான் - சிந்துகிற அமிருதத்துளிகள்போலு மென்னும்படி சொல்பவனானான்; (எ-று.)- அவற்றை. அடுத்த கவியிற் காண்க. இப்பொழுது கிருபன் பேசும் பேச்சு, துரியோதனன் முதலிய சில தீயோர்க்கு வருத்தம் விளைப்பினும், நீதிமுறைமையுணர்ந்த நல்லோர்பலர்க்கும் இன்பத்தை விளைத்தல்பற்றி, அச்சொற்களுக்கு அமிருதத்துளிஉவமை. வன்மைகண்டு என்றும் பாடம். (340) 67.-கிருபன் நீதிகூறத் துரியோதனன் அதனை மறுக்கத் தொடங்குதல். சூதன்மைந்தன்வேலையேழு சூழுமேதினிக்கெலாம் நாதன்மைந்தனுடன்வெகுண்டு நவிலுதற்குநண்ணுமோ ஏதமுண்டுசாலவென்ன ராசராசனிகலியக் கோதமன்றனக்குளங் கொதிக்குமாறுகூறுவான். |
(இ-ள்.) 'சூதன் மைந்தன் - தேர்ப்பாகனது மகன், வேலை ஏழு சூழும் மேதினிக்கு எலாம் நாதன் மைந்தனுடன் - ஏழுகடல்கள் சூழ்ந்த பூமி முழுதுக்கும் அரசனது குமாரனோடு, வெகுண்டு நவிலுதற்கு நண்ணும் ஓ - கோபித்து வீரவாதம் பேசுதற்குத் தகுமோ? [தகாது என்றபடி]; சால ஏதம் உண்டு - (இங்ஙனம் பேசுதல்) மிகவுங்குற்றமுடைத்து, 'என்ன - என்று (கிருபன்) சொல்ல,- ராச ராசன் - அரசர்க்கரசனாகிய துரியோதனன், - இகலி - மாறுபட்டு,- அ கோதமன் தனக்கு உளம் கொதிக்கும் ஆறு கூறுவான் - அந்தக்கிருபாசாரியனுக்கு மனம் கொதிக்கும்படி (மறுமொழி) கூறுபவனானான்; (எ-று.)- அவற்றை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க. நவிலுதற்கு என்ற குகரவீற்று வினையெச்சம், தொழிற்பெயர்த் தன்மைப்பட்டு 'நண்ணும்' என்ற முற்றுக்கு எழுவாயாய்நிற்கும். கோதமன் என்றது, கௌதம னென்ற வடசொல்லின் விகாரம். 68.-துரியோதனன் மறுமொழி: இன்னாரின்னார்க்குச் சாதிபேதம்கருதத்தக்கதன் றென்றல். கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்வண்மைகை உற்றவர்க்கும்வீரரென்றுயர்ந்தவர்க்கும்வாழ்வுடைக் கொற்றவர்க்குமுண்மையான கோதின்ஞானசரிதராம் நற்றவர்க்குமொன்றுசாதி நன்மைதீமையில்லையால். |
மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) கற்றவர்க்குஉம் - படித்தவர்களுக்கும், நலன் நிறைந்த கன்னியர்க்குஉம்- அழகுநிறைந்த கன்னிகைகளுக்கும், வண்மைகை உற்றவர்க்குஉம் -ஈகைக்குணம் கைவந்தவர்களுக்கும், வீரர் என்று உயர்ந்தவர்க்குஉம் -வீரர்களென்று சிறப்பாக மதிக்கப்பட்டவர்களுக்கும், வாழ்வு உடைகொற்றவர்க்கும்உம் - செல்வவாழ்க்கையை |