பக்கம் எண் :

190பாரதம்ஆதி பருவம்

     இவர்கள் செல்லுமுன்னே இவர்கள் சம்பந்தமான தூளியும் தொனியும்
சென்று அவனுக்கு இடர்விளைத்தன எனச் சமத்காரந் தோன்றக் கூறினார். ஓளி
- ஒழுங்கு; இனி, நீட்டல் விகாரமாக, ஒளியெனினுமாம்.             (350)

77.-அதனையுணர்ந்து யாகசேனன் போருக்கு வருதல்.

வளைத்தசேனையானைவாசி வாயினின்றுகுமுறவே
உளைத்தெழுந்துமுழையைவிட் டுடன்றசிங்கவேறுபோல்
திளைத்ததன்பதாதியோடு மோகயாகசேனனும்
இளைத்தநெஞ்சனன்றிநீடு புரிசைவாயிலெய்தினான்.

     (இ-ள்.) வளைத்த - (இங்ஙனம் மதிற்புறத்து) முற்றுகைசெய்த, சேனை -
குருசேனையிலுள்ள, யானை வாசி - யானைகளும் குதிரைகளும், வாயில் நின்று
- (யாகசேனநகரத்து) வெளிவாயிலில்நின்று, குமுற - ஆரவாரஞ்செய்ய,-
உளைத்து - கர்ச்சித்துக்கொண்டு, முழையை விட்டு எழுந்து உடன்ற - (தான்
இருக்கிற) மலைக்குகையை விட்டுப் புறப்பட்டுக் கோபித்துவருகிற, சிங்கம்
ஏறுபோல் - ஆண்சிங்கம் போல, மோக யாகசேனன்உம் - மிக்க
ஆசையையுடைய துருபதராசனும், இளைத்த நெஞ்சன் அன்றி - சோர்வடைந்த
மனத்தை யுடையவ னாகாமல், திளைத்த தன்பதாதியோடு - நெருங்கிய தனது
சேனையோடு, நீடு புரிசை வாயில் எய்தினான் - உயர்ந்த மதில்வாயிலை
அடைந்தான்; (எ-று.)

     பதாதி - காலாட்படை; இங்கே, சேனையென்றமாத்திரமாய் நின்றது.
கொடுப்பதாகச்சொன்ன அர்த்தராச்சியத்தைக்கெடாமல் அதில் ஆசை
கொண்டதனால், 'மோகயாகசேனன்' என்றார்.                     (351)

78.-சோமகரோடு கௌரவர்க்கும், யாகசேனனோடு
அருச்சுனனுக்கும் போர் நிகழ்தல்.

சோமகர்க்குமுடுகுசேனை சூழவந்தகுருகுலக்
கோமகர்க்கும்வெஞ்சமர் விளைந்ததாண்மைகூரவே
பூமகற்குமிக்கமா முனிக்குவாய்மைபொய்த்தவம்
மாமகற்கும்விசயனுக்கு மன்னுபோர்வயங்கவே.

இதுவும் அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) சோமகர்க்குஉம் - சோமககுலத்து அரசர்களுக்கும், முடுகுசேனை
சூழவந்த குருகுலம் கோ மகர்க்குஉம் - விரைந்து நெருங்கிய சேனைகள் சூழ
வந்த குருகுலவரசகுமாரர்களுக்கும், ஆண்மை கூர - வலிமைமிக, வெம் சமர்
விளைந்தது - கொடிய போர் உண்டாயிற்று; பூமகற்குஉம் மிக்க மாமுனிக்கு -
பிரமதேவனினும்  மேம்பட்ட பெருமையையுடைய துரோணாசாரியனுக்கு,
வாய்மை பொய்த்த - சொன்ன வாக்குத் தவறின, அ மா மகற்குஉம் - அந்தச்
செல்வ மகனான யாகசேனனுக்கும், விசயனுக்குஉம் - அருச்சுனனுக்கும், மன்னு
போர் வயங்க - பெரும்போர் மிக,- (எ-று.)- 'குமரர் நகரி நோக்கினார் ' என
வருங்கவியோடு முடியும்.

     பாஞ்சாலராசர்கள், சோமகனென்னும் அரசனது குலத்தவராதலால்,
சோமகரெனப்பட்டனர்; சோமகன் - துருபதனது பாட்டான்.          (352)