பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்199

92.- மகனையும் மகளையும்பெற்றதனால் துருபதன்
மனமகிழ்தல்.

முன்றோன்றியதன்குலமுதலான் முரட்போர்முனிக்குமுடிவுமவன்
பிற்றோற்றியவக்கன்னிகையால் விசயன்றனக்குப்பெருநலமும்
உற்றோர்ந்துள்ளமிகத்தருக்கி யுவந்தாங்கமைந்தானுயர்மகத்தால்
பெற்றோன்பெற்றபேறுமகப் பெற்றார்தம்மிற்பெற்றார்யார்.

     (இ-ள்.) உயர் மகத்தால் பெற்றோன் - சிறந்த யாகஞ்செய்ததனால்
(இப்படிப்பட்ட பிள்ளைகளைப்) பெற்ற யாகசேனன்,- முன் தோன்றிய
தன்குலம்முதலால் - முதலிற்பிறந்த தனது குமாரனால், முரண் போர் முனிக்கு
முடிவுஉம் - வலிய போரையுடைய துரோணாசாரியனுக்கு அழிவுஉண்டாதலையும்,
அவன் பின் தோன்றிய அ கன்னிகையால் -அவனுக்குப்பின்புபிறந்தஅப்
பெண்ணால், விசயன் தனக்கு பெரு நலம்உம் -அருச்சுனனுக்குச் சிறந்த
இன்பமுண்டாதலையும், உற்று ஓர்ந்து - (கருத்தில்)ஊன்றி ஆராய்ந்து, ஆங்கு -
அதனால், உள்ளம் மிக தருக்கி - மனம்மிகக்களித்து, உவந்து அமைந்தான் -
மகிழ்ந்துநிரம்பிநின்றான்[திருப்திபெற்றான்]: பெற்ற பேறு-(அவன்) பெற்ற
பாக்கியத்தை,மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் - பிள்ளைகளைப்
பெற்றவர்களுள்அடைந்தவர் எவர்?

     துருபதன் தான் கருதியபடி பகைவெல்லுதற்கு மகனையும் மணம்
முடித்தற்கு மகளையும் தகுதியாகப்பெற்றான் என்ற பொருளை, 'பெற்றபேறு
மகப்பெற்றார் தம்மிற்பெற்றார் யார்' என்று விளக்கினார்             (366)

93.-திட்டத்துய்மனுக்குத் துரோணன்வில்வித்தை முற்றக் கற்பித்தல்.

கரணமறுவற்றிலங்குதிறற் கலசோற்பவன்பாற்கனல்பயந்தோன்
சரணமலர்தன்றலைக்கொண்டு தனுநூலெனக்குத்தருகென்றான்
மரணமிவனாற்றனக்கென்ப துணர்ந்துங்குருவுமறாதளித்தான்
அரணியிடத்திற்செறிந்தன்றோ வதனைச்செகுப்பதழலம்மா.

    (இ-ள்.) கனல் பயந்தோன் - அக்கினியிற் பெறப்பட்டவனான
அக்குமாரன்,- கரணம் மறு அற்று இலங்கு - அந்தக்கரணமான மனத்தில்
களங்கமில்லாது தூய்மையுடையவனாய் விளங்குகிற, திறல் - வல்லமையிற்
சிறந்த, கலச உற்பவன்பால்-கலசத்தினின்று தோன்றியவனான
துரோணாசாரியனிடத்தில் (சென்று), சரணம்  மலர் தன் தலைக்
கொண்டு- (அவனது) திருவடித் தாமரை மலர்களைத் தன்
தலையின்மேற்கொண்டு [காலில் விழுந்து வணங்கி], எனக்கு தனுநூல் தருக
என்றான் - 'எனக்கு வில்வித்தையைக் கற்பித்துக் கொடுப்பாயாக ' என்று
வேண்டினான்; (வேண்ட,) குரு உம் - அந்தத் துரோணாசாரியனும், இவனால்
தனக்கு மரணம் என்பது உணர்ந்துஉம் - இவனால் தனக்கு மரணம்
நிகழுமென்பதை யறிந்தும், மறாது அளித்தான் - மறுக்காமல் (தனுர்வித்தையைக்)
கற்பித்துக் கொடுத்தருளினான்; அழல் அரணியிடத்தில் செறிந்து அன்றுஓ
அதனை செகுப்பது - நெருப்பு அரணிக்கட்டையினின்று பிறந்தன்றோ அதனை
அழிப்பது! அம்மா - ஆச்சரியம்! (எ-று.)