உனக்குத் தம்பியர்வலிமையும் தோள்வலிமையையும் மிக்கிருத்தலால் அவையேபோதும்; வேறுசேனைமுதலியனவும் மிகுதியாக வேண்டா என்பது, உட்கோள். தருமத்தினின்று தவறினவர்களுக்குத் தக்க தண்டனை செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்கு 'தருமன்' என்று பெயர்: அப்பெயரே இங்கு அறமெனக் குறிக்கப்பட்டது; 'தேவர்களை இருதிணையாலுங் கூறலாம்' ஆதலால், இங்கு அஃறிணையாற் கூறினார். (386) 113.-திருதராட்டிரன் புரோசனனைத் தருமனுக்கு மந்திரியாக்குதல். புகன்றகேள்விப் புரோசனன்றன்னையிம் மகன்றனக்குநீ மந்திரியாகியே இகன்றவர்ச்செற் றினியோர்க்கினிமைசெய்து அகன்றஞாலமிவன் வழியாக்குவாய். |
இதுவும்அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) (இங்ஙனம் சொன்னபின்பு திருதராட்டிரன்), புகன்ற கேள்வி புரோசனன் தன்னை - சிறப்பித்துச்சொல்லப்பட்ட நூற்கேள்வியையுடைய புரோசனனை நோக்கி,- 'நீ-, இ மகன் தனக்கு மந்திரி ஆகி - (இனி)இத்தருமபுத்திரனுக்கு மந்திரியாய், இகன்றவர் செற்று - (இவனது) பகைவர்களை அழித்து, இனியோர்க்கு இனிமைசெய்து- (இவனது) நண்பர்களுக்கு நன்மையைச் செய்து, அகன்ற ஞாலம் இவன் வழி ஆக்குவாய் - பரந்த நிலவுலகத்தை இவன்வழிப்படுத்துவாய் ',- (எ-று.)- 'என்ன' என வருங் கவியோடு இயையும். இனி, பின்னிரண்டடிகளுக்கு வேறொருபொருள் வருமாறு:- இகன்றவர்ச் செற்று - பகைவர்களான அப்பாண்டவர்களை அழித்து, இனியோர்க்கு இனிமைசெய்து - வேண்டியவர்களான துரியோதனாதியர்க்கு நன்மைசெய்து, அகன்ற ஞாலம் - பரந்த இராச்சியம் முழுவதையும், இவன்வழி ஆக்குவாய்- இத்துரியோதனனுக்கு உரியதாம்படி செய்திடுவாய் என்பதாம். இங்ஙன் இரு பொருள்படக்கூறினன் திருதராட்டிர னென்க. (387) 114.- புரோசனன் பாண்டவருடன் வாரணாவதஞ் செல்லுதல். என்னவாங்க ணிறைஞ்சியனந்தரம் சொன்னசொற்படி சூழ்படைவேண்டுவ என்னவுங்கொண் டிளவரசோடுமப் பொன்னகர்க்கொடு போயினனென்பவே. |
(இ-ள்.) என்ன - என்றுசொல்ல,- (புரோசனன்), ஆங்கண் - அப்பொழுது, இறைஞ்சி - (அத்திருதராட்டிரனை) வணங்கி, அனந்தரம் சொன்ன சொல்படி சூழ்படை வேண்டுவ என்னஉம் கொண்டு - பின்பு (அத்திருதராட்டிரன்) சொன்ன சொல்லின்படி சூழ்ச்சிசெய்தற்குரிய ஆயுதங்களிலும் சேனை முதலிய பரிவாரங்களிலும் வேண்டியவை யெல்லாவற்றையும் உடன்கொண்டு,- இளவரசோடுஉம் - இளவரசனான தருமனுடனே, (மற்றை நால்வரையுங் குந்தியையும்), அ பொன் நகர் கொடு போயினன் - அழகிய அந்த வாரணாவதநகரத்துக்கு அழைத்துக்கொண்டு சென்றான்; |