(தன்) தாயாகிய இடிம்பையுடன், பெற்ற பிள்ளை - அவள்பெற்ற மகனான கடோற்கசன், ஏகினான் - (இடிம்பவனத்துக்குச்) சென்றான்; வீமன், இடிம்பையை மணக்கும்போது கூறிய வாக்குப்படியே மகன் பிறந்தபின் அவள் அவனைவிட்டு நீங்கின ளென்பதை, முதனூலால் அறிக. இங்கே, 'பிறையெயிற்றியாய்' என்றது, அவளது இயல்பாகிய அரக்கிவடிவத்தை. 'இறைவ' என்றும், 'இப்படி விடைதருக' என்றும் பாடமுண்டு. (442) 33.- பாண்டவர் பிராமணவேடங்கொண்டு வேத்திரகீயஞ் சார்தல். சாத்திரமறைதெரி முனிவர்தன்மையின் காத்திரிமாறியக் காவல்வேந்தரும் கோத்திரஞ்சூத்திரங் குடியுரைத்துளார் வேத்திரகீயமா நகரின்மேயினார். |
(இ-ள்.) அ காவல் வேந்தர்உம் - (பூமிமுழுவதையுங்) காக்குந் தொழிலுக்கு உரிய அரசர்களாகிய அந்தப்பாண்டவர்களும், சாத்திரம் மறை தெரி முனிவர் தன்மையின் காத்திரம் மாறி - சாஸ்திரங்களையும் வேதங்களையும் அறிந்த அந்தணர்களுடைய வேடமாக வடிவம்மாறி, கோத்திரம் சூத்திரம் குடி உரைத்துளார்- (அவ்வேடத்திற்கு ஏற்றபடி) ஒரு கோத்திரத்தையும் சூத்திரத்தையும் குடிப் பெயரையும் கற்பித்துச் சொல்லிக்கொண்டு, வேத்திரகீயம் மா நகரில்-, மேயினார் - போய்ச் சேர்ந்தார்கள்; (எ-று.) வேத்திரகீயநகரத்திற் சேர்ந்தாரென்று பாலபாரதமும் கூறும். பாண்டவர் சேர்ந்தநகரம் ஏகசக்கரநகரமென்பதும், அங்கு இவர்களுறைந்தஇடம் வேத்திரகீயமெனப்படுமென்பதும் வியாசபாரதத்தாற் பெறப்படும். ஆகவே, வேத்திரகீயமா நகரம் என்பதற்கு - வேத்திரகீயம் என்ற இடத்தைத் தன்னிற் கொண்ட ஏகசக்கரநகரமெனப் பொருள்காணலாம். சாஸ்திரம் - தருக்கம் வியாகரணம் வேதாந்தம் முதலியன. கோத்திரம் - பாரத்வாஜம், ஆத்ரேயம் போல்வன. சூத்திரம் - ஆபஸ்தம்பம், ஆச்வலாயநம் போல்வன. குடிப்பெயர் ஏற்றபடி கண்டுகொள்க. (443) 34.- அவர்கள்வரவுக்கு அவ்வூரந்தணர் மகிழ்தல். அந்தணரைவரும் யாயுமந்நகர் வந்துழியதிதியர் வரவுகாண்டலும் முந்துபுமுந்துபு முகமன்கூறினார் செந்தழல்வேள்விகூ ராதிதேவரே. |
(இ-ள்.) அந்தணர் ஐவர்உம் - பிரமணராகிய பாண்டவர் ஐந்துபேரும், யாய்உம் - அவர்கள் தாயும், அ நகர் வந்த உழி - அந்த நகரத்திற்கு வந்த பொழுது,- அதிதியர் வரவு காண்டலும் - அந்த விருந்தினர்களுடைய வருகையைக் கண்டவளவிலே, செம் தழல் வேள்வி கூர் ஆதிதேவர் - செந்நிறமான அக்கினியினிடத்து யாகஞ் செய்தலில் மிக்கவர்களான [சிறந்த] பிராமணர்கள், முந்துபு முந்துபு முகமன் கூறினார் - ஒருவரினும் ஒருவர் முற்பட்டு எதிர்கொண்டு வந்து உபசாரவார்த்தை சொன்னார்கள்; (எ-று.) |