(இ-ள்.) 'கொண்டல் வாகன்உம் - மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனும், குபேரனும்-, நிகர்- (இவனுக்கு) ஒப்பாவார்,' என - என்று, குறித்து- எண்ணி,- புண்டரீகன் - தாமரையில் வாழ்பவனாகிய பிரமதேவன், முன்-, படைத்த - சிருஷ்டித்த, அ புரவலன் - அந்த அத்தியென்ற அரசன், அமைத்தது- (தனக்கு) இராசதானியாகப்படைத்த நகரம்,- எண்திசா முகத்து - எட்டுத்திக்கிலும், எழுது - எழுதிய,சீர் - கீர்த்தியையுடைய, இயக்கர் - இயக்கரின், மா நகர்உம் - சிறந்த நகரமும்[அளகையும்], அண்டர் தானம்உம் - தேவர்கள் வாழிடமான அமராவதிநகரமும்,உவமை கூர் - உவமையாக மிகப்பெற்ற, அத்தினாபுரி - அத்தினாபுரியென்றபட்டணமாகும்; செல்வத்தினால் யட்சராஜனான குபேரனது ராஜதானியாகிய அளகாபுரியும், அழகினால் தேவேந்திரராஜதானியான அமராவதியும் போலும் அத்தினாபுரியென்க. அத்தியென்பவனாலேற்படுத்தப்பட்டதுபற்றி, இந்நகரம் அத்தினாபுரியெனப் பெயர்பெற்றது: இனி, யானைச்சேனையை மிகுதியாக வுடையதாக இவ்விராசதானியையமைத்தனாதல் வந்த பெயருமாம். (37) 30.-கஜேந்திரனும் முதலையுமானவரும் இக்குலத்து உதித்தவரே. மீனமாகியவிண்ணவன் விநதைமுன்பயந்த யானமீதெழுந்தருளிவந் திருபதம்வழங்கக் கானநாண்மலர்க்கயத்திடைக் கயமும்வெங்கராமும் ஆனமானவரிருவரு மக்குலத்தவரே. |
(இ - ள்.) மீனம் ஆகிய - மச்சாவதாரஞ்செய்த, விண்ணவன் - திருமாலாகிய தேவன், விநதை முன் பயந்த யானம்மீது - விநதை யென்பவள் முன்புபெற்ற(கருடனாகிய) வாகனத்தின்மேல், எழுந்தருளிவந்து-, இருபதம் வழங்க - (தன்னுடைய)தாளிணைகளைக் காட்சிகொடுக்குமாறு, கானம் நாள் மலர் கயத்திடை - நறுமணம்பொருந்தி யன்றுமலர்ந்த தாமரைமலரைக்கொண்ட பொய்கையிலேயிருந்த, கயம்உம் -யானையும், வெம் கராம்உம் - கொடிய முதலையும், ஆன-, மானவர் இருவர்உம்-பெருமையுள்ளோரிருவரும், அகுலத்தவர்ஏ - அந்தக் குலத்திற்பிறந்தவரே யாவர்;(எ-று.) யானையானவனை இந்திரத்யும்நனென்றும், முதலையானவனை அநுரு என்றும்கூறுப. இந்தக் குருகுலச்சருக்கத்து இந்த ஓரிடந்தவிரச் சந்திரன்முதல்விசித்திரவீரியனென்ற அரசன்வரையில் பாலபாரதத்திற் கூறிய முறையும் இந்நூலிற்கூறியமுறையும் ஒத்திருக்கின்றன: அத்தியென்ற அரசனைக் கூறியபின் குருஎன்ற அரசனே பாலபாரதத்திற் கூறப்பட்டுள்ளான்: கயமும் முதலையும் ஆனஅரசரைப்பற்றி, அந்தப் பாலபாரதத்திற் கூறப்பட்டிலது. ஒருகுலத்தின் சிறப்புத்தோன்றப்பொறுக்கிக் கூறுமிடத்து அந்தக்குலத்தினில் தவறுசெய்து சாபமடைந்தவரைப்பற்றிச்சொல்லுவது சிறவாதாதலாலும், இங்ஙன் சாபமடைந்தவராகக் கூறப்படுவார் இந்தக்குலத்தவரேயென்று நிச்சயமாகக் கூறுதற்கு ஏற்ற மேற்கோள் கிடையாமையாலும்,ஒருகால் இந்தப்பாடல் இடைச்செருகலாயிருக்குமோ என்றுதோன்றுகின்றது. (38) |