பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்251

தலைப் பார்த்து, பின் ஆகஎய்தி - வீமன்பின்னே வந்து, இவை -
இச்சொற்களை, பேசுவான்-; (எ-று.)- அவற்றை மேலே காண்க.

     வெண்மையான சோற்றுத்திரளை நெடியபெரிய வாயினுள்ளே விரையச்
செல்லுதற்கு, வெண்ணிறமான அன்னப்பறவை நெடிய பெரிய
மலைக்குகையினுள்ளே விருப்பத்தோடு செல்லுதல் உவமை. வண்டியில் வீமன்
முன்பின்னாக மாறியிருந்து உண்கின்றதனால், எதிர்வந்த அரக்கன் வீமனுக்குப்
பின்னாயின னென்க. அன்னம் - பறவையைக் குறிக்கும்போது ஹம்ஸம்என்ற
வடசொல்லின் திரிபும், சோற்றைக் குறிக்கும்போது அந்நம் - என்ற
வடசொல்லின் திரிபுமாம்.                                     (464)

55.- பகன்வீரவாதங்கூறிக்கொண்டு வீமனைக் கைகளாற்
புடைத்தல்.

புலிதனக்கிடுவிடக்கைநின்றதொரு பூஞைதின்னுமதுபோலநீ
பலியனைத்தையும்விழுங்கினாலிது பலிக்குமோவெளிமைபாரெனா
ஒலிபடக்கிரியிலுருமெறிந்ததென வோடிவந்துபிடரொடியவே
வலிபடப்பணைவிறற்றடக்கைகொடு மாறிமாறிமுறைசீறினான்.

     (இ-ள்.) 'புலிதனக்கு இடு விடக்கை - புலிக்கென்று இட்டு வைத்த
இறைச்சியை, நின்றது ஒரு பூஜை - அருகில் நின்றதொரு பூனை, தின்னுமது
போல - தின்பதுபோல, நீ-, பலி அனைத்தைஉம் விழுங்கினால்- (எனக்கென்று
செலுத்திய) உணவுமுழுவதையும் உண்டால், இது பலிக்கும்ஓ - இது
சித்திக்குமோ? எளிமை பார் - (எனது) எளிமையைப் பார்', எனா -
என்றுசொல்லி, ஓடிவந்து-, (பகன்), கிரியில்  உரும் எறிந்ததுஎன - மலைமேல்
இடி இடித்தாற் போல, ஒலி பட - பேரோசை யுண்டாக, பிடர் ஒடிய -
(வீமனுடைய) பிடரி ஒடியும்படி, பணை விறல் தட கை கொடு - பருத்த
வலியபெரிய (தன்) கைகளால், வலி பட - பலமாக, முறை மாறிமாறி - முறையே
மாறிமாறிப் புடைத்து, சீறினான் - கோபங்காட்டினான்; (எ-று.)

     நீ என்னிடத்துக் கருதிய எளிமையை எனது தொழிலால்
அங்ஙனமன்றெனக் காட்டுவே னென்பான், 'எளிமைபார்' என்றான்; இது -
குறிப்புமொழி. கைகொடு முறை மாறி மாறி - ஒரு கைமாற்றி ஒருகையால்
விடாதுஅடித்து என்க.                                          (465)

56.-அப்புடையல்களைச் சிறிதும் இலட்சியஞ்செய்யாமல்
வீமன்புசித்துக்கொண்டிருத்தல்.

பக்கமும்பிடருமொக்கமுட்டிகள் படப்படக்கவளபாரமாய்
விக்கநின்றனவயிற்றிரண்டருகும் வீழவீழமுன்விழுங்கலும்
புக்கபண்டமுடனுன்னுடற்றசை புசிப்பனெங்ஙனிவைபோவதென்
றக்கடுங்கையுமிளைத்துவெஞ்சினமு மாறிநின்றனனரக்கனே.

     (இ-ள்.) பிடர்உம் - பிடரியிலும், பக்கம் உம் - விலாப்புறத்திலும்,
முட்டிகள் - (பகனது) முட்டியாகப்பிடித்த கைக்குத்துகள், (அதனால்) கவளம்
பாரம் ஆய் விக்க நின்றன வயிறு இரண்டு அருகும் வீழ வீழ - (முன்பு) பருத்த
கவளங்களாய் (உட்புகாது)