பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்267

பார்த்துக்கொண்டு, பொறி வரி வண்டின் ஈட்டம்-உடற்புள்ளிகளையும்
இசைப்பாட்டையுமுடைய வண்டுகளின் கூட்டங்கள், புறத்து சுற்றுஉம் இருந்து
இரங்க-வெளியிலே சுற்றிலும் இருந்து ஆரவாரிக்க,-வண்டு ஒன்று -ஒருவண்டானது,
இறகரால் வீசி உள்புக்கு-(தன்) சிறகுகளால் (அத்தாமரையரும்பின் இதழ்களை)
நெகிழ்த்தி அதனுள்ளே புகுந்து, இன் மது நுகர்தல் - இனிய தேனையுண்ணுதலை,
கண்டு-(பாண்டவர்கள்) பார்த்து,-நெறியில் நல் நிமித்தம் ஆக நெஞ்சு உற நினைத்து
சென்றார்-(அதனைத் தமக்கு) வழியிலே நேர்ந்த நற்குறியாக மனத்திற்பொருந்த
நினைத்து வழிச்சென்றார்கள்; (எ-று.)

     திரௌபதியைக் கருதி வந்த பலர்  வாளாசூழ்ந்துநிற்கத்தாம் தடையறச்
சென்றுஅவளைப் பெறுதல் கூடு மென்பதற்கு, வண்டின்செயலை ஓர் அறிகுறியாக
எண்ணிச்சென்றனரென்க.                                         (487)

13.வண்டுறைமருங்கினாங்கோர் மாங்கனிவீழ்தல்கண்டே
தண்டுறைமீன்களெல்லாந் தத்தமக்கிரையென்றெய்த
விண்டுறைகிழியவோடி வென்றொருவாளைதன்வாய்க்
கொண்டுறைவலிமைநோக்கிக் குறிப்பினாலுவகைகூர்ந்தார்.

     (இ - ள்.) ஆங்கு-அவ்வழியிலே வண் துறை மருங்கின்-செழிப்பான ஒரு
நீர்த்துறையின் ஓரத்திலே, ஓர் மாங்கினி வீழ்தல் -ஒரு மாம்பழம் விழுந்ததை,
கண்டு-,தண் துறை மீன்கள் எல்லாம்-குளிர்ச்சியான அந்நீர்த்துறையிலுள்ள
மீன்கள்யாவும்,தம் தமக்கு இரை என்று எய்த-(அதனைத்) தங்கள் தங்களுக்கு
இரையாகக்கடவதென்று எண்ணி(க் கவர்தற்கு) வர, ஒரு வாளை - ஒரு
வாளைமீன், உறைவிண்டு கிழிய ஓடி - நீர் கிழிந்துபிரியும்படி ஓடிவந்து, வென்று-
(அம்மீன்களையெல்லாம்) பயன் பெறாதொழியச்செய்து, தன் வாய்  கொண்டு உறை-
(அம்மாங்கனியைத்) தன் வாயினாற் கவர்ந்துகொண்டிருந்த, வலிமை-வல்லமையை,
நோக்கி-(பாண்டவர்கள்) பார்த்து,-குறிப்பினால் - அந்தக்குறிப்பினால், உவகை
கூர்ந்தார்-; (எ-று,)

     திரௌபதியைக்குறித்துத் தம் தமக்கு உரியளாகக்கடவளென்ற விருப்பத்தோடு
பற்பல அரசர்வந்து சூழ்ந்துநிற்கத் தாம் தடையறச்சென்று அவர்களைப்
பயன்பெறாதொழிபவராக்கி அவனைக் கைக்கொண்டு கவலையற நுகர்ந்து வாழலா
மென்பதற்கு, மாங்கனியை மீன்களுக்குஇல்லாமல் வாளைமீன் கவர்ந்த இச்செயலைச்
சூசகமாகக்கண்டு மிகமகிழ்ந்தனர்.                                  (488)

14.மாக்குரலளகவல்லி வதுவையினழகுகாணத்
தாக்குரலடிகொள்யானைத் தரணிபரெவரும்வந்தார்
வீக்குநன்மிளிர்பொற்பூணீர் விரைவுடன்வம்மினென்று
கூக்குரல்விளிப்பபோலுங் கோகிலக்குரலுங்கேட்டார்.

     (இ-ள்.) 'மா-கருநிறமான, குரல் அளகம் - கூந்தலையுடைய, வல்லி-
பூங்கொடிபோன்ற திரௌபதியினது, வதுவையின் அழகு-கலியாணக்காட்சியை, காண
- காணுதற்கு, தாக்கு உரல் அடி கொள் யானை தரணிபர் எவர்உம் வந்தார் -
(பகைவரைத் தாக்கு