பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்279

நுதல்போலவும் இருத்ததாலும் வருத்தஞ் செய்தன என நயந்தோன்றக் கூறினார்.
'கண்போலம்பும் நுதல்போலுங் கடுங்கார்முகமும்' என்றது-எதிர்நிலையணி.  (508)

34.-செவிலித்தாயர் திரௌபதிக்கு அரசர்களை இன்னா
ரின்னாரென்று கூறத்தொடங்கல்.

திருந்தார்மன்றற்குழலணங்கின் செவிலித்தாயர்கடல்கடைந்து
வருந்தாவமுதநிகர்வாளை மயில்போற்கொண்டுமன்னவைபுக்கு
இருந்தாரிருந்தகாவலரை யின்னோரின்னோரிவரென்று
முருந்தார்பவளத்துவரிதழ்வாய் முகிழ்வாணகைக்குமொழிகின்றார்.

     (இ-ள்.) கடல் கடைந்து வருந்தா-(சிரமப்பட்டுப்) பாற்கடலைக்கடையாமலே
பெற்ற, அமுதம்-அமிருதத்தை, நிகர்வாளை-ஒப்பவளான  அத்திரௌபதியை, மயில்
போல் கொண்டு-மயில்போல அழைத்துக்கொண்டு, மன் அவை புக்குஇருந்தார்-
இராசசபையிற் சென்று சேர்ந்தவர்களாகிய, திருந்து ஆர் மன்றல் குழல் அணங்கின்
செவிலித்தாயர்-ஒழுங்காக அலங்கரித்தல் அமைந்த நறுமணமுள்ள கூந்தலையுடைய
அவளது செவிலித்தாய்மார்,- இருந்தகாவலரை-(அங்கு) வீற்றிருந்த அரசர்களை,
இவர்இன்னோர் இன்னோர் என்று-இவர் இன்னார் இன்னாரென்று, பவளம் துவர்
இதழ்வாய் முருந்து ஆர் முகிழ் வாள் நகைக்கு மொழிகின்றார்-பவழம் போலச்
சிவந்த இதழ்களையுடைய வாயையும் மயிலிறகின் அடிக்குருத்தையொத்த
முல்லையரும்புபோன்ற ஒள்ளியபற்களையுமுடைய அவளுக்கு (ச் சுட்டிக்காட்டி)ச்
சொல்லுகின்றவரானார்கள்; (எ-று.) -அதனை மேலிற்காண்க. திருந்து-
முதனிலைத்தொழிற்பெயர்.                                       (509)

35.-இது, துரியோதனனைக் குறித்தது.

மாற்றம்பிறிதொன்றுரையானிவ் வன்போர்வில்லின்வலிநோக்கிச்
சீற்றஞ்சிந்தைகொண்டழலப் பொய்யேமலர்ந்ததிருமுகத்தான்
ஏற்றந்தன்னில்வேறொருவ ரிப்பேருலகிலில ரென்னத்     
தோற்றம்படைத்தோன்றனைக்காட்டித் துரியோதனன்மற்றிவனென்றார்.

     (இ-ள்.) 'இ பேர் உலகில்-இந்தப்பெரிய உலகத்திலே, தன்னில் வேறு ஒருவர்
ஏற்றம் இலர்-தன்னைப்போல வேறொருத்தர் உயர்வுள்ளவர் இல்லை,' என்ன-என்று
தோற்றம் படைத்தோன்தனை-எண்ணங்கொண்டவனான வணங்காமுடிமன்னனை,
காட்டி-(செவலித்தாயர் திரௌபதிக்குச்) சுட்டிக்காண்பித்து,-இ வல் போர் வில்லின்
வலி நோக்கி-வலியப்போருக்குஉரிய இந்த வில்லின் வலிமையைப்பார்த்து, சிந்தை
சீற்றம் கொண்டு அழல - (அதனையெடுத்துவளைக்குந் திற மில்லாமையால்) மனம்
கோபங்கொண்டு கொதிக்க, மாற்றம் பிறிது ஒன்று உரையான்-
யாதொருவார்த்தையையுஞ் சொல்லாதவனாய், பொய்ஏ மலர்ந்த திருமுகத்தான் -
(திறமையுடையான்போலப்) பொய்யாக மலர்ச்சிகொண்ட அழகிய
முகத்தையுடையவனாகிய, இவன்-, துரியோதனன்-, என்றார்-;

     சுயம்வரத்திற்கு என்று சபைகூட்டியவிடத்தில் குறியெய்வதென்ற
ஒருசெயலைக்குறித்துக் கூறியது தகுதியன்றென்றுகூறக்