பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்29

39.- அந்தக் கங்கா நதிப்பெண் சந்தனுவைக்கண்டு தன் துயர்நீங்குதல்.

போற்றியகுரிசின்மெய் புளகமெய்தவே
ஏற்றியவிழியின ளிளகுநெஞ்சினள்
சாற்றயமலரயன் சாபமிவ்வழித்
தோற்றியதெனவுறு துயரநீங்கினாள்.

     (இ - ள்.) போற்றிய - (அந்தக்கங்காநதிப்பெண்ணைப்) புகழ்ந்து கூறின,
குரிசில்- ஆண்களிற்சிறந்தவனான சந்தனுராசனுடைய, மெய் - உடம்பானது,
புளகம் எய்த -மயிர்க்கூச்சையடைய, ஏற்றிய- செலுத்திய, விழியினள் -
கண்களையுடையவளும்,இளகும் நெஞ்சினள்- (அந்தச்சந்தனுராசனிடத்துக்)
குழைந்தநெஞ்சையுடையவளுமாகி,- மலர் அயன் சாற்றிய சாபம்- (திருமாலின்
உந்திக்)கமலத்தில் வீற்றிருக்கின்ற பிரமதேவன் கூறிய சாபமொழி, இவ்வழி -
இவ்விடத்து,தோற்றியது - காண்கின்றது, என - என்று, உறு துயரம் - (தான்)
கொண்டதுயரத்தை,நீங்கினாள்-; (எ -று.)

     வருணதேவனே பிரமனது சாபத்தினால் சந்தனுவாய்ப் பிறந்தானென்றும்,
தான் மணக்கவேண்டியவன் இவன்தான் என்றும் கங்காநதியின் பெண்தெய்வம்
உணர்ந்தாளாதலால், அவனைக் கண்டதும் ஒருவாறு துயரம் நீங்கப்
பெற்றாளென்க. சாபவரலாறுமேல் 56- ஆம் பாடல்முதல் கூறப்படும். அன்பு
கொண்டு பார்த்தபார்வைபட்டதனால், மெய், புளகம் எய்துவதாயிற்று. மேற்புளக
மெய்தவே என்றும்பாடம்.                                       (47)

40.- சந்தனுவும் அவளிடத்து ஆதரங் கூர்தல்.

பொங்கியமதர்விழிப் புரிவுமாதரந்
தங்கியழுகிண்முலைத் தடமுநோக்கியே
இங்கிதமுறைமைநன் றென்றுவேந்தனும்
அங்கிதமுடனவட் கன்புகூரவே.

     (இ - ள்.) பொங்கிய - மிக்க, மதர் - களிப்பினையுடைய, விழி புரிவுஉம் -
கண்ணின் செயலாகிய குறிப்புநோக்கமும், ஆதரம் தங்கிய - விருப்பந்தங்கப்பெற்ற,
முகிழ் முலை தடம்உம் - (தாமரை) மொட்டையொத்த கொங்கைத் தலமும்
[கொங்கைபூரித்தலையும்], நோக்கி - பார்த்து,- இங்கிதம் முறைமை நன்று -
(என்விஷயத்து இவளுடைய) குறிப்புச்செயலின் முறை இனிதாக வுள்ளது, என்று-
,வேந்தன்உம்-  சந்தனுராசனும், அங்கு - அப்போது, இதமுடன் - இதமாக,
அவட்கு -அந்தக்கங்கையாள் திறத்தில், அன்பு கூர - அன்பு மிக,- (எ -று.)
"உசாவினான்" எனஅடுத்த கவியோடு முடியும். இங்கிதம் - குறிப்பால் நிகழும்
உறுப்பின் தொழில்.                                            (48)

41.- சந்தனு, 'நீ கன்னிகையாயின் என்னை மணக்கவிருப்ப  
முண்டோ,' என்று கங்கையாளைக் கேட்டல்.

கன்னியேயாமெனிற் கடிகொள்பான்மையை
என்னின்மற்றுயர்ந்தவ ரில்லைமண்ணின்மேல்
உன்னினைவுரையென வுசாவினானிகல்
மின்னிலைவடிகொள்வேல் வேந்தர்வேந்தனே.