19.-திருவரங்கஞ் சேர்ந்து, நம்பெருமாளைத் திருவடி தொழுதல். *இலங்காபுரிமுன்செற்றவ னிருபோதும்வணங்கத் துலங்காடரவணைமேலறி துயில்கொண்டவர்பொற்றாள் பொலங்காவிரியிருபாலும் வரப்பூதலமங்கைக்கு அலங்காரமளிக்குந்தென் னரங்கத்திடைதொழுதான். |
(இ-ள்.) இலங்காபுரி முன் செற்றவன் -இலங்கை நகரத்தை முன்பு அழித்தவனான இராமபிரான், இருபோதுஉம் - (காலைமாலை யென்னும்) இரண்டுசந்தியாகாலங்களிலும், வணங்க - சேவிக்க, துலங்கு ஆடு அரவு அணைமேல்அறிதுயில் கொண்டவர் - விளங்குகிற படமெடுத்தாடுந்தன்மையுள்ள ஆதிசேஷனாகிய சயனத்தின்மேல் யோகநித்திரை செய்தருளுகிற எம்பெருமானுடைய, பொன்தாள் - அழகிய திருவடிகளை,- பொலம் காவிரி இருபால்உம் வர - அழகியகாவேரிநதி இரண்டுபக்கங்களிலும் பிரிந்து பெருகிவர, பூதலம் மங்கைக்கு அலங்காரம் அளிக்கும் - பூமிதேவிக்கு அழகைச் செய்கின்ற, தென் அரங்கத்திடை - அழகிய ஸ்ரீரங்கத்தில், தொழுதான் - வணங்கினான்; (எ-று.)இங்குப்பெருமாள் திருநாமம்-ஸ்ரீரங்கநாதன்; பிராட்டி-ஸ்ரீரங்கநாயகி. திருவரங்கம் - நூற்றெட்டுத் திருமால்திருப்பதிகளுள் தலைமை பூண்டது; சோழநாட்டில் உபயகாவேரிமத்தியில் உள்ளது: கோயிலென்றும், பெரியகோயிலென்றும் மறுபெயருடையது: பூலோக வைகுண்ட மெனப்படுகிற மகிமையையுடையது. (ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் யோகியரது உள்ளக்கமலம் என்னும் இவையனைத்தினும் பிரியமான தென்று திருமால்) திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்கும் இடமாதல்பற்றி, 'ரங்கம்' என்று அவ்விமானத்துக்குப் பெயர்: அது, அரங்கமென வந்தது. இலங்காபுரியை யழித்தவன் என்றதன் பொருள் - தென்கடலிடையிலுள்ள அவ்விலங்கைத்தீவைத் தனக்கு இராசதானியாகக் கொண்டு அதனை அரசாண்ட இராட்சசராசனான இராவணன் முதலிய அரக்கர்களை வேரொடு அழித்தவனென்பது;இவ்வரலாறு இராமாயணத்திற் பிரசித்தம். அறிதுயில் - எல்லாவற்றையும்அறிந்துகொண்டே செய்யும் நித்திரை. (650) 20.-பல தீர்த்தங்களில் நீராடி மதுரை சேர்தல். வளவன்பதி முதலாக வயங்கும்பதி தோறுந் துளவங்கம ழதிசீதள தோயங்கள் படிந்தே |
* இச்செய்யுளின் பின், அடியில் வருகிற செய்யுள் சிலபிரதிகளிற் காணப்படுகிறது:- "ஆங்கப்பணவத்துட்பொருளரி தாளிணைதொழுது பாங்கர்ப்புதுவெயில்வீசுபல்பருமாமணி குயிலா வோங்கிக்கிளர்பொலன்மண்டபமொருதன்பெயராலத் தூங்கற்கரிநடையிந்திரசுதனொன்றுபடைத்தான்." (ஸ்ரீரங்கத்தில் அம்மண்டபம், அருச்சுனமண்டபமென்று வழங்கும்.) |