பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்375

     தமிழுக்கு இளமை - நாள்தோறும் வளர்ச்சிபெறும் நிலைமை; "கன்னித்தமிழ்"
என்பதுங் காண்க. அதற்கு வண்மை-வேண்டின சொற்பொருட்
கருத்துக்களையெல்லாம் குறைவறத் தன்னிற் கொண்டிருத்தலோடு, வேறுபல
பாஷைகள் தன்னினின்று உற்பவித்தற்கு இடமாயிருத்தல். தமிழ் - இங்குத்
தமிழ்பாட்டுக்கு ஆகுபெயர். புறவம் - கொல்லை; முல்லைநிலம்; காடும், காடு
சார்ந்தஇடமும். ஒரு காலத்தில் வருணன் சோமசுந்தரக் கடவுளோடு மாறுபட்டு
ஏழுமேகங்களையும் அளவின்றி மழைபொழிந்து மதுரையை யழிக்கும்படி ஏவ.
அங்ஙனமே வந்த ஏழுமேகங்களையும். தடுக்கும்பொருட்டு அக்கடவுள்
கட்டளையால் அவரது சடையிலுள்ள நான்குமேகங்களும்மேலுயர்ந்து நான்கு
மாடமாகக் கூடப் பெற்றதனால், மதுரை, நான்மாடக்கூடல்என்றும், கூடலென்றும்
பெயர்பெறும்; கன்னி கரியமால் காளி ஆலவாய் என்பவரின் மாடங்கள்
கூடியதனால்வந்த பெயருமாம்.                                 (651)

வேறு.

21.அருச்சுனன் மதுரையிற் பாண்டியராசனைக் காணுதல்.

குன்றிலிள வாடைவரும் பொழுதெல்லா மலர்ந்திருக் கொன்றை
                                            நாறத்,
தென்றல்வரு பொழுதெல்லாஞ் செழுஞ்சாந்தின் மணநாறுஞ்
                                      செல்வ வீதி,
நன்றறிவார் வீற்றிருக்கு நான்மாடக் கூடல்வள நகரியாளும்,
வென்றிபுனை வடிசுடர்வேன் மீனவனை வானவர்கோன்
                                  மதலை கண்டான்.

     (இ-ள்.) குன்றில் - கைலாசகிரியிலிருந்து, இள வாடை வரும் பொழுது
எல்லாம்- இளமையான வடதிசைக்காற்று வரும்பொழுதெல்லாம், மலர்ந்த திரு
கொன்றை நாற- மலர்ந்த சிறந்த கொன்றை மலர் வாசனைவீச, தென்றல் வரும்
பொழுது எல்லாம் -(பொதிய மலையிலிருந்து) தென்றற் காற்று வரும்பொழு
தெல்லாம், செழுஞ் சாந்தின்மணம் நாறும் - செழிப்பான சந்தனத்தின் வாசனை
வீசப் பெற்ற, செல்வம் வீதி -செல்வவள மமைந்த வீதிகளை யுடைய, நன்று
அறிவார் வீற்றிருக்கும்நான்மாடக்கூடல் வளம் நகரி - நன்மையையறியும்
மேன்மக்கள் வீற்றிருக்கப்பெற்றநான்மாடக்கூடலென்னும் ஒருபெயரையுடைய சிறந்த
மதுராபுரியை, ஆளும் -அரசாளுகிற, வென்றி புனை வடி சுடர் வேல் மீனவனை-
வெற்றிபொருந்தியதும்கூர்நுனியுள்ளதும் ஒளியையுடையதுமான வேலாயுதத்தை
யேந்திய பாண்டியராசனை,வானவர் கோன் மதலை - தேவராசனான இந்திரனது
குமாரனாகிய அருச்சுனன்,கண்டான் - பார்த்தான்;

     மீனவன் - மீன்வடிவமெழுதிய கொடியை யுடையவன். அப்பொழுது
அரசாண்ட பாண்டியராசனது பெயர், சித்திரவாகநனென்பது. "விடையா
வடந்தைசெய்வெள்ளியம் பொருப்பினும்" என்று பிறரும் வாடைக்காற்றைக்
கைலாசத்தினின்றுவருவதெனக் கூறினமை காண்க. சங்கப்புலவர்கள் போன்றவரை
யுடைமைதோன்ற,"நன்றறிவார்வீற்றிருக்கும்" எனப்பட்டது.

     இதுமுதல் இருபத்தொரு கவிகள் - பெரும்பாலும் முதல் நான்கு சீரும்
காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரியவிருத்தங்கள். (652)