57.- | அடிகடிரு வுளத்தெண்ண மெம்ம னோர்க ளறியினிசை யலர்பலரிங்கறிவுறாமற், கடியயர்வுற் றும்பதிகொண் டடைகவென்றுங்காவலர்க்குக் கடனென்றுங் கசியக் கூறிக், கொடியிடைவெங் களபமுலைக் கன்னி மானைக் கூயணங்கே மெய்ம்மையுறக் கொண்டகோலப், படிவமுனிக் கிருபருவம் பணித்த வேவல் பரிவுடனீ புரி யென்று பணித்திட்டானே. |
(இ-ள்.) 'அடிகள் திருஉளத்து எண்ணம் - சுவாமிகளுடைய திருவுள்ளக் கருத்தை, எம்மனோர்கள் அறியின் - எம்மவர்கள் அறிந்தால், பலர் இசையலர் - (அதற்குப்) பலர் இணங்கமாட்டார்: (ஆதலால்), இங்கு - இவ்விடத்தில், அறிவு உறாமல்(அவர்கள்) அறியாதபடி [ரகசியமாக], கடி அயர்வுஉற்று - (சுபத்திரையை) விவாகஞ்செய்துகொண்டு, உம் பதி கொண்டு அடைக - உமது நகரத்துக்கு (அவளை)உடன் அழைத்துக்கொண்டு சென்று சேர்வீராக', என்றும்-, காவலர்க்கு கடன்என்றும்- '(இங்ஙனம் பலருமறியாதபடி ஒரு கன்னிகையை மணந்து உடன்கொண்டு செல்லுதல்)அரசர்கட்கு முறைமையே' என்றும், கசியகூறி - (அவ்வருச்சுனது மனம்) மகிழும்படி(ஏகாந்தத்திற்) சொல்லி,- கொடி இடைவெம் களபம்முலைகன்னிமானைகூய் -பூங்கொடிபோன்ற [நுண்ணிய] இடையையும் விரும்பப்படுங் கலவைச்சந்தனமணிந்ததனங்களையுமுடைய இளமையான மான்போன்ற சுபத்திரையையழைத்து, 'அணங்கே - பெண்ணே! மெய்ம்மை உற கொண்ட கோலம் படிவம்முனிக்கு - உண்மையாகக்கொண்ட அழகிய சன்னியாசிவேஷத்தையுடையஇம்முனிவனுக்கு, நீ-, இரு பருவம் - நான்கு மாசகாலம், பரிவுடன் -அன்போடு,பணித்த ஏவல் புரி - நியமித்த குற்றேவல்களைச் செய்வாய்,' என்றுபணித்திட்டான்-என்று கட்டளையிட்டான்; (எ-று.) சுபத்திரையை துரியோதனனுக்கு மணஞ்செய்விக்கவேண்டு மென்பது மூத்தவனான பலராமனது உத்தேச மாதலால், 'அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர்பலர்' என்றான். கண்ணனுக்கு அருச்சுனன்பக்கலுள்ள சினேகவாற் சலியம் விளங்க 'கசியக்கூறி ' என்றார். ஒருநாளுக்கு மேல் ஓர் ஊரில் தங்காமல்கிராமைகராத்திரமாய்த்திரியும் முறைமையையுடையரான சன்னியாசிகள் மழைக்காலமாகிய நான்கு மாசங்களில் மாத்திரம் ஒரேயிடத்தில் வசித்திருக்கலா மென்பது, நூற்கொள்கை; அந்தச் சாதுர்மாஸ்யஸங்கல்பவிதிப்படி இத்துறவி இப்பொழுது இங்கு நான்குமாசகாலம் இருப்பா னென்றுகொண்டு, 'இருபருவம்' என்றான். பருவம், இருது என்ன - ஒருபொருளன. (688) வேறு. 58.- சுபத்திரை அருச்சுனனுடைய கள்ளவேடத்தை யறியாமை. உள்ள டங்கிய காமவெங் கனல்புறத் தோடிக் கொள்ளை கொண்டுடன் மறைத்தெனக் கூறையுந் தானும் மெள்ள வந்துதன் கடிமனை மேவிய வேடக் கள்ள வஞ்சனை யறிந்திலள் கற்புடைக் கன்னி. |
|