பக்கம் எண் :

42பாரதம்ஆதி பருவம்

சென்னி ஏந்தினோம் - எமது மலரை முடித்தற்குஉரிய சென்னியில் தாங்கினேம்;
(எ - று.)

     எமதுசாபத்திற்கு ஒருவிமோசனம் ஏற்படுமாறு திருவருள் புரியவேணுமென்று
வசிஷ்டமுனிவன் பாதங்களில் வணங்கினோ மென்றவாறு. உததி - நீரையுடையது:
கடல்: வடசொல்.                                                 (74)

67.அன்புடைமுனிமுனி வாறிமானுடப்
புன்பிறப்பெழுவரும் புரிந்துமீளுதிர்
மின்புரைதெரிவைசொல் விழைந்தநீயவண்
இன்பமற்றநேகநா ளிருத்தியென்னவே.

     (இ - ள்.) அன்புஉடை - கருணையையுடைய, முனி - அவ்வசிட்ட
முனிவன்,முனிவு ஆறி - கோபந்தணிந்து, "எழுவர்உம் - (தேனுவைக் கவர்தற்கு
உடந்தையாயிருந்த) ஏழுபேரும், புல் மானுடம் பிறப்பு புரிந்து மீளுதிர் -
புல்லியமானிடப்பிறவியையெடுத்து (உடனே உமது பதவிக்கு) வந்துவிடுங்கள்: மின்
புரை தெரிவை சொல் விழைந்த - மின்னலைப் போன்ற [பேரொளிபடைத்த]
மனைவியின் சொல்லை விரும்பிக் கேட்டுக் களவைப் பிரதானனாகஇருந்து
செய்த, 'நீ-, அவண் - அந்தப்பூமியில், இன்பம் அற்று - பெண்ணின்பத்தை நீங்கி,
அநேகம்நாள் இருத்தி - வெகுகாலம் இருப்பாயாக", என்ன - என்றுகூற,
-(எ-று.) - "செல்வமும்...எண்மருமிழந்தனம்...என" என்று அடுத்த கவியோடு
தொடரும்.

     தெரிவையின்சொல்லை விழைந்து களவாடிய பிரபாசனுக்கு மானுடனாகித்
தெரிவையின்பம்நீங்கி மண்ணுலகிற் பலநாளிருந்து பிறகு தன்
பதவியையடையுமாறும், அவனுக்கு உடந்தையாயிருந்த மற்றையெழுவர்க்கும்
பூமியில் மானுடப்பிறவி யெடுத்துஉடனே மீளுமாறும் சாபவிடை தந்தனன்
வசிட்ட முனிவனென்க.                                          (75)

68.விண்வருசெல்வமும் விழைவுமேன்மையும்
எண்மருமிழந்தன மென்சேய்வேமென
மண்வருதையலை வணங்கத்தையலும்
பண்வருமொழிசில பகர்ந்துதேற்றினாள்.

     (இ - ள்.) (இங்ஙனம் வசிட்டமுனிவன் சபித்ததனால்), எண்மர் உம் -
(வசுக்களாகிய நாங்கள்) எட்டுப்பேரும்,- விண் வரு செல்வம்உம் -
சுவர்க்கலோகத்துப்பெறுமாறுவருகின்ற ஐசுவரியத்தையும், விழைவு உம்-
போகத்தையும், மேன்மைஉம் -சிறப்பையும், இழந்தனம்- இழந்திட்டேம்:
என்செய்வேம்- (இனி) என்செய்யமாட்டுவேம்? என - என்று, மண் வரு
தையலை வணங்க - பூமியிலிழிகின்றகங்காதேவியை வணங்க, தையல்உம் -
அந்தத் தேவியும், பண் வருமொழிசில -இராகத்தையொத்த சிலசொற்களை,
பகர்ந்து - சொல்லி, தேற்றினாள்- (அவர்களுடையமனவருத்தத்தைச் சிறிது)
ஆறச் செய்தாள்; (எ -று.) - கங்கையாள் தேற்றுவதைமேலிரண்டு செய்யுள்களிற்
காண்க.                                                   (76)

69.வலத்துயர்தடம்புய வருணனுங்குரு
குலத்தினிலயன்வரங் கொண்டுதோன்றுமால்