பக்கம் எண் :

44பாரதம்ஆதி பருவம்

72.சதையமீன்கடவுளுஞ் சசிகுலத்துநல்
விதையெனமேதினி மீதுதோன்றினான்
துதையளிசெறிகுழற் றோகையாயினாள்
இதையமுற்றுயர்நதியென்னுமின்னுமே.

     (இ - ள்.) சதையம் மீன் கடவுள்உம் - சதயமென்ற நட்சத்திரத்துக்கு உரிய
கடவுளான வருணதேவனும், சசிகுலத்து - சந்திரகுலத்திலே, நல்விதை என -
சிறந்தவித்துப்போல, மேதினிமீது - பூமியின்மேல், தோன்றினான் - பிறந்தான்;
இதையம்உற்று - நன்மனம் பொருந்தி, உயர் - மேன்மைபெற்ற, நதி என்னும் -
நதியென்கிற,மின் உம் - மின்னல்போன்ற பெண்ணும், துதை - நெருங்கிய,
அளி - வண்டுகள்,செறி - நெருங்கிய, குழல் - கூந்தலையுடைய, தோகை
ஆயினாள் -மானுடப்பெண்ணானாள்;    (எ - று.)

     இது, வருணன் பூமியில் குருகுலத்திற் பிறக்க, கங்கையாளும்
மானுடமகளாதலைக் கூறும். பிரதீபமன்னனுக்குப் பிறந்தகுமாரருள் சந்தனு,
இரண்டாமவனாயிருந்தும் முதல்வனான தேவாபிபோல இளமையிலேயே
கானகஞ்செல்லாது இல்லறத்தைப் பூண்டு ஒழுகியதனால் வீடுமன் முதலியோர்
தோன்றிக் குருகுலம் பெருக்கியமையின், 'சசிகுலத்து நல்விதை யென' என்று
கூறியதென்பர். சசி = சசீ: முயலை (முயல்போன்றகறையை) யுடையது:
காரணப்பெயர். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையுண்டு : சதய
நட்சத்திரத்திற்கு வருணன் தேவதை : ஆதலால், வருணனை 'சதையமீன்கடவுள்'
என்றார். மேதினி = மேதிநீ: மதுகைடபர்களின் மேதசினால்[உடற்கொழுப்பினால்]
நனையப்பெற்ற தென்று அவயவப்பொருள். வண்டுகள்மொய்த்தல் தேவமாதர்க்கன்றி,
மானுடமகளுக்கே யுரியதாதலால், 'துதையளி செறிகுழல்தோகை' என்றதனால்
மானிட மகளென்பது பெறப்படும். தோகை, மின் - ஆகுபெயர்கள்.         (80)

73.தவமுறக்குடதிசைத் தலைவன்றாரமாம்
அவள்வயிற்றுதித்தன ரந்தவெண்மரும்
உவகையிற்பெரும நீயுணர்ந்துகொள்கென
இவடிருக்கணவனு மின்னகூறுவான்.

     (இ - ள்.) தவம் உற - நல்வினை பொருந்துதலால், குடதிசை தலைவன்
தாரம்ஆம் - மேற்குத்திக்குக்குத் தலைவனான வருணதேவனுக்கு மனைவியான,
அவள்வயிற்று - அந்தக் கங்காதேவியின் வயிற்றிலே, அந்த எண்மர்உம்
உதித்தனர் - அந்தஅஷ்ட வசுக்களும் (முறையே) பிறந்தார்கள்: பெரும- 
பெருமையுடையோனை! நீ-,உவகையின் - மகிழ்வோடு, உணர்ந்துகொள்க-
(இச்செய்தியை)  அறிந்துகொள்க, என -என்று (கங்கையாள்) கூறி நிற்க,- இவள்
திரு கணவன்உம் - இந்தக் கங்கையாளின்சிறந்த கணவனான சந்தனுவும்,
இன்ன - இவ்வாறான வார்த்தைகளை, கூறுவான் -சொல்பவனானான்; (எ-று.) -
கணவன் கூறுவன மேற் செய்யுளிற் காணப்படும்.

     வருணன் மனைவியான கங்கையாளிடத்து வசுக்களெண்மரும்
தோன்றினாரென்று கங்கையாள் தான் கூறிய வரலாற்றினை