பக்கம் எண் :

456பாரதம்ஆதி பருவம்

47.- இந்திரன் தக்ஷகனைக்குறித்துக் கவலைப்படுதல்.

தானவர்புரங்கணீறெழமுனிந்த தமனியச்சிலைக்கைவெள்ளூர்தி
யானவனமதுபுரத்தையுஞ்சுடுவா னழன்றனன்போலுமென்றஞ்சி
வானவர்நடுங்கவானவர்க்கரசாம் வலாரியுமனனுறத்தளர்ந்து
கானவருடனேதக்ககனென்னுங் கட்செவிகெடுமெனக்கரைந்தான்.

     (இ-ள்.) 'தானவர் - அசுரர்களுடைய, புரங்கள் - (முப்) புரங்களும், நீறு
எழ -சாம்பராய்ச்சிதறும்படி, முனிந்த - கோபித்து எரித்த, தமனியம் சிலை கை -
பொன்மயமான (மேரு) மலையாகிய வில்லையேந்தியகையையுடைய, வெள் ஊர்தி
ஆனவன் - வெண்ணிறமான ரிஷப வாகனத்தையுடையவனான சிவபிரான், நமது
புரத்தைஉம் சுடுவான் அழன்றனன் போலும் - (தேவர்களான) நமது நகரத்தையும்
எரிக்கும்படிகோபங்கொண்டனன்போலும், ' என்று - என்று எண்ணி, வானவர் அஞ்சி
நடுங்க - மேலுலகத்தார்பயந்து (உள்ளமும் உடலும்) நடுக்கமடைய,- வானவர்க்கு
அரசு ஆம் வலாரிம் - அத்தேவர்கட்கு அரசனான இந்திரனும், கானவருடனே
தக்ககன் என்னும் கட்செவி கெடும் என - 'அக்காட்டி லுள்ளாருடனே (அங்கு
வசிப்பவனான)தக்ஷகனென்னும் பாம்பு அழிந்திடுமே! ' என்று சிந்தித்து, மனன் உற
தளர்ந்து கரைந்தான் - மனம் மிகத்தளர்ந்து உருகினான்; (எ-று.)

     சிவபிரான் காலாக்கினிசொரூபி யாதலால் அந்நெருப்பைச் சிவசொரூபமாகக்
கருதின ரென்றும், காண்டவமெரிக்கிற தீயை முன்பு முப்புரமெரித்த சிவபிரானது
நகைத்தீப் போன்றதெனக் கருதின ரென்றுங்கொள்க. இரட்டுறமொழித லென்னும்
உத்தியால் சிலை யென்பதற்கு மலையென்றும், வில்லென்றும் இரு பொருள் ஒருங்கு
கொள்ளப்பட்டன. வெள்ளூர்தி-அன்மொழித்தொகை. தமனியம் = தபநீயம்;
நெருப்பில்தபிக்கப்பட்டு விளங்குவதென்றும், வலாரியென்பது - வலனென்னும்
அசுரனுக்குப்பகைவனாய் அவனை யழித்தவனென்றும் பொருள்படும். கட் செவி -
கண்களையேகாதுகளாக வுடையது; பண்புத்தொகையான்மொழி: பாம்புக்கு,
கண்ணென்னும்பொறியொன்றிலேயே செவிப்புலனாகிய கேள்வியும் இருக்கு
மென்ப.                                                      (768)

48.- இந்திரன்தீயையவிக்கும்படி மேகங்களையேவித் தான்
தேவசேனையுடன் போர்க்குப்புறப்படுதல்.

பரந்தெழுபுகையாற்றத்தமவடிவம் பண்டையிற்பதின்மடங்காகச்
சுரந்திடும்புயல்களனைத்தையுநெடுநீர் சொரிந்தவித்திடுகெனச்சொல்[லி
நிரந்தரமருகுவிடாதுதன்னிழல்போ னின்றவானவரையுமேவிப்
புரந்தரன்றானுமீரிருமருப்புப்பொருப்பின்வெம்பிடர்மிசைப்புகுந்தான்.

     (இ-ள்.) புரந்தரன் - இந்திரன்,- பரந்து எழு புகையால் தம்வடிவம்
பண்டையின்பதின்மடங்கு ஆக சுரந்திடும் புயல்கள் அனைத்தைஉம் -
பரவியெழுகிறஅவ்வனற்புகையினால் தங்கள் தங்களுடைய உருவம்முன்னையினும்
பத்து மடங்குஅதிமாக வளர நீர் சுரக்கப்பெற்ற மேகங்களெல்லாவற்றையும்நோக்கி,
நெடு நீர்சொரிந்து