பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 146

வேறு.

131.- இதுமுதல் நான்கு கவிகள்- இருதிறத்துச்
சேனைகளும் போர் செய்தலையுணர்த்தும்.

யானை மேல்வரு நிருப ருந்திறல்யானை மேல்வரு நிருபஞ்
சோனை மாமுகி லேழு மேநிக ரென்னவம்புதொ டுத்தலிற்
றானை யாறுநி றைந்து பல்லணி யாகிமிஞ்சிய சதுர்விதச்
சேனை யாவையு மெய்சி வந்தனசிந்தை மாமலர் கருகவே.

    (இ - ள்.) யானைமேல் வரு நிருபர்உம் - (கிருஷ்ணன் பக்கத்தவராய்)
யானைமேலேறிவந்த அரசர்களும், திறல் யானைமேல் வரு நிருபர்உம் -
(சிசுபாலன் பக்கத்தவராய்) வலிய யானைமேலேறி வந்த அரசர்களும்,
சோனைமா முகில் ஏழ்உம்ஏ நிகர் என்ன - விடாப்பெருமழை பொழியும்
பெரிய ஏழு மேகங்களுமே (தங்கட்குச்) சமான மென்று சொல்லும்படி,
அம்புதொடுத்தலின்-(இடைவிடாது) அம்புமழை சொரிந்ததனால், தானை
ஆறுஉம் நிறைந்து பல்அணி ஆகி மிஞ்சிய சதுர்விதம் சேனை யாவைஉம் -
அறுவகைப் படைகளும் நிரம்பிப் பற்பல அணிவகுப்புகளாய் மிகுந்திருக்கிற
நால்வகைச் சேனைகளிலும் பிராணிகளும், (புண்பட்டு), சிந்தை மா மலர் கருக
மெய்சிவந்த - (தம் தமது) மேலான இதயகமலம் வாடிக் கருக
இரத்தப்பெருக்கினால் உடல்சிவக்கப் பெற்றான்; (எ - று.)

     நிருபர் - வடசொல்.  மனிதரைக்காப்பவரென்று பொருள்படும்; நிரு -
மனிதர்.  முகில்ஏழ் - சம்வர்த்தம்;  ஆவர்த்தம், புஷ்கலாவர்தம், சங்கிருதம்,
துரோணம், காளமுகி, நீலவர்ணம்என.  தானை ஆறு - மூலப்படை,
கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்பன.
சிந்தைகருகமெய் சிவந்தன -முரண்தொடை.  உம்மை ஐந்தனுள்
முதலிரண்டும் - எண்ணுப்பொருளன: மற்றை மூன்றும் - முற்றும்மை.  ஏகாரம்
இரண்டனுள், முன்னது பிரிநிலையோடு தேற்றம்; பின்னது - ஈற்றசை.
அரசர்கள் மேகம்போல அம்புமழை சொரிந்ததனாற் படைகளாகிய நதிகள்
நிரம்பி என ஒரு பொருள் தொனித்தலுங் காண்க.  "பூவிற்குத்தாமரையே"
என்றபடி எல்லா மலர்களிலுந் தாமரை சிறத்தலால், அடைமொழிகொடாது
வாளா 'மலர்' எனப்பட்டு: மாமலர் எனவே, தாமரையென்றவாறுமாம்.

     இதுமுதல் ஆறுகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள்.

132.ஓரிரண்டுவரூதினிக்குளுமுயர்தடங்கிரியொப்பவே
யீரிரண்டுவிதத்தினாலுமியம்பலுற்றனவெண்ணில்பஃ
றேரிரண்டணியுருளினோடுருள்சென்றுமுட்டினதீயிடிக்
காரிரண்டெதிர்மலையுமாறெனவண்டபித்திகலங்கவே.