தாக்கித் திக்கஜங்களையும் தேவர்களையும் செவிடாக்கிவிட்டது என அம்முழக்கத்தின் மிகுதியை வருணித்தவாறாம். வெருவரும்படி - வெருவு என்ற வினைப்பகுதியும் வாஎன்ற துணைவினையும் சேர்ந்து விகாரப்பட்டு 'வெருவா' என நின்றது. கம்பு, விதம், மத்தவாரணகர்ணம்-வடசொற்கள். 'ஊழியெறிந்தகால்' என்றும் பாடமுண்டு. 'கம்புகொம்பு விதங்கள்' என்ற பாடத்துக்கு - சங்குகளின் வகைகளும் ஊதுகொம்புகளின் வகைகளும் என்று பொருள் காண்க. (134) 135.-சுற்றத்தார்கள்போர்செய்ய கிருஷ்ணசிசுபாலரும் பொருதல். புடைபடக்கிளையாகிவந்தெதிர்பூதுரந்தரர்யாவருந் தொடைபடப்பரிவுறுமனத்தொடுதொந்தயுத்தமுடற்றினார் குடையெடுத்தனரிருவரும்பெறுகொடியெடுத்தனர்கொற்றவெம் படையெடுத்தனர்மாமறைப்பசுபாலனுஞ்சிசுபாலனும். |
(இ -ள்.) புடைபட - பக்கங்களிலே பொருந்த, கிளை ஆகி வந்து - (இருவர்க்கும்) சுற்றமாய்வந்து, எதிர் - எதிர்த்த, பூதுரந்தரர் யாவர்உம்-பூமியை ஆளுகிற பாரத்தை வகிப்பவரான அரசர்களெல்லாரும், தொடை பட - தொடர்ச்சியாக, பரிவு உறு மனத்தொடு - (தம்தம் தலைவரிடம்) பற்றுமிக்க மனத்துடனே, தொந்தயுத்தம் உடற்றினார் - இவ்விருவராக ஒருவரோடொருவர் போர்செய்து பகையழித்தார்கள்; (அங்ஙனமாக), குடை எடுத்தனர் - ஒற்றைவெண் கொற்றக்குடையை உயரத்தரித்துள்ளவர்களும், பெறுகொடி எடுத்தனர் - (வெற்றிக்கு அறிகுறியாகப்) பெற்ற துவசத்தை உயரநாட்டியுள்ளவர்களுமான, மா மறை பசுபாலன்உம் சிசுபாலன்உம் இருவர்உம் - மகிமையுள்ளவேதங்கட்குத் தலைவனான கோபாலனாகிய ஸ்ரீகிருஷ்ணனும் சிசுபாலனும் ஆகிய இருவர்களும், கொற்றம் வெம்படை எடுத்தனர் - வெற்றியையுடைய கொடிய ஆயுதங்களை (ப் போர் செய்தற்பொருட்டு)க் கைகளிலெடுத்துக் கொண்டார்கள்; (எ - று.) 'புடைபட' என்பதற்கு - பெருந்தொகுதியாக என்றும், 'தொடைபட' என்பதற்கு - அம்புகள் (எதிரிகளின்மீது) படஎன்றும், 'பரிவுறுமனத்தொடு' என்பதற்கு - (தாம் மகாவீரராதலாற் போரில்) ஆசைமிக்க மனத்தோடு என்றும் பொருள் கொள்ளலாம். பரிவு - கவலையுமாம். கிளை - படைத்துணை. பூ துரந்தரர், த்வந்த்வயுத்தம், பசுபாலன், சிசுபாலன்-வடசொற்கள். மாமறைப் பசுபாலன் - சிறந்த பிரமாணமான வேதங்களை வெளியிட்டவனும் அவ்வேதங்களினாற் கொண்டாடப்படுபவனுமான கோவிந்தன். 'பசுபாலன்' என்ற பெயர்-பசுக்களைக் காப்பவனென்றும் உயிர்களைக் காப்பவனென்றும் பொருள்படும். 'பசுபாலனும் சிசுபாலனும்' என்றவிடத்துப் பிராசமென்னுஞ் சொல்லணி காண்க. (135) |