மற்றொருவர் வெல்லுதலும் ஒருவருக்கு மற்றொருவர் தோல்வியடைதலும் இல்லாமல், வஞ்சினம் உரைசெய்து-(ஒருவரையொருவர் கொல்வதாகச்) சபதவார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு, உள்ளம்உம் மெய்உம் வாகு பூதரங்கள்உம் பூரித்து-மனமும் உடம்பும் மலைகள்போன்ற தோள்களும் (வீராவேசத்தாற்) பூரிப்படையப்பெற்று, (இருவரும் சில நேரம் பொருது), எஞ்சினர்தமை போல் இளைத்தபின்-வலியொடுங்கினவரைப் போலக் களைப்புற்ற பின்பு, கஞ்சனை முனிந்தோன் - கம்சனைக் கோபித்துக் கொன்றவனான கண்ணபிரான், இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி - 'இனி (இவனை) மேலுலகத்துக்கு அனுப்புதல் முறைமையாம்' என்று நினைத்து, இவன் முடி தலைமேல் - இந்தச் சிசுபாலனுடைய கிரீடந்தரித்த சிரசின்மேல், கதிர்மணி திகிரி ஏவினன் - பிரகாசமுள்ள அழகிய சக்கராயுதத்தைப் பிரயோகித்தான்; (எ - று.) கம்சனும் சிசுபாலனும் துர்வாசமுனி சாபமுற்ற ஜயவிஜயரின் பிறப்பாய் ஓரினத்தவ ராதலால், அவர்கட்கு முன்பு வாக்களித்தபடி கம்சனைக்கொன்ற கண்ணன் தானே இப்பொழுது சிசுபாலனையுங் கொல்லப் படைக்கல மெறிந்தனன் என்பது, ஈற்றடியின் கருத்து. திருமாலுக்குச் சக்கரம் முதலியன ஆயுதவகையில் மாத்திரமன்றி ஆபரணவகையிலும் அமைதல் தோன்ற, 'மணித்திகிரி' எனப்பட்டது. சாபநிவிருத்திபெறுதற்கு உரியகாலம் குறுகியிட்டதனால், 'இனி வானேற்றுதல் கடன்' என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினன். வஞ்சினம் - வீரவாதம். உள்ளம் பூரித்தல் - யுத்தத்தில் உற்சாகத்தால் மனம் கொதித்துப் பொங்குதல்: உடம்பும் தோள்களும் பூரித்தல் - அந்தப் போர்மகிழ்ச்சியாற் புடைபருத்தல். பாஹு பூதரம் - வடமொழித்தொடர்; முன்பின்னாகத்தொக்க உவமைத்தொகை. 'எஞ்சினர் தமைப்போல்' என்பதற்கு - இறந்தவரைப்போல வென்று உரைப்பாருமுளர். பூதரம் - மலை, (மேலுங்கீழும் இருந்து) பூமியைத் தாங்குவது. வான் - இங்கே பரமபதம். இது முதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினேழுகவிகள் - இச்சருக்கத்தின் பதினெட்டாங்கவிபோன்ற எழுசீர்க்கழிநெடிலடியா சிரியவிருத்தங்கள். (137) 138.-சக்கரம் சிசுபாலனைத்தலைதுணித்தல். ஏவியதிகிரிவீரரைத்துறக்கமேறவிட்டிடுமிரவியைப்போன் மேவியபகையாமைத்துனன்முடியைவிளங்குகோளகையுறவீசி யாவிகளனைத்துநிறைந்தொளிசிறந்தவச்சுதனலைகொள்பாற்கடலிற் றீவியவமுதமமரருக்களித்தோன்றிருக்கரஞ்சென்றுசேர்ந்ததுவே. |
(இ -ள்.) ஏவியதிகிரி - (அங்ஙனம் கண்ணன்) செலுத்திய சக்ராயுதமானது,- வீரரை துறக்கம் ஏற விட்டிடும் இரவியை போல் - (பின்னிடாது பொருது இறந்த) வீரரை மேலுள்ளதான வீரசுவர்க்கத்திற்குச் செல்லும்படி வழிவிடுகிற சூரிய மண்டலத்தைப்போலப் பிரகாசித்துக்கொண்டு சென்று, மேவிய பகை ஆம் |