நெருங்கிய உறவினரே கூறினாலும் கேட்பவர் பொறுப்பரோ? [பொறார்] என்று சொல்பவர்களும், காது ஒருகுழையோன் இளவலைதேர்மேல் கண்டு தம் கண் இணை களிப்பார் - ஒரு காதிலே குண்டலத்தைத் தரித்தவனான பலராமனது தம்பியாகிய கண்ணபிரானைத் தேரின் மீதிருக்கத் தரிசித்து (க் கண்படைத்த பயன்பெற்றோமென்று) தங்கள் கண்களிரண்டுங் களிக்கப் பெறுபவர் களுமானார்கள்; (எ - று.) காதொருகுழையோனிளவலைத் தேர்மேற்கண்டு - கண்ணன் வெற்றிபெற்று விளங்கிய காட்சியைச் சேவித்து. இக்கண்ணன் பக்கல் மனிதபாவனையை யொழித்துத்தேவபாவனையையே கொள்ளவேண்டுமென்பது, இரண்டாமடியின் உட்கொள். நெருங்கிய உறவினன் செய்த பிழையைப் பொறுத்திலனென்ற குற்றம் இதனாற் கண்ணனுக்கு வராதென்பது, மூன்றாமடியின் தாற்பரியம். மாது ஒரு பாகன் - அம்பிகையை வாமபாகத்திலுடையவன். கோதொரு வடிவாம் புன்மொழி - குற்றத்தின் ஒரு வடிவமான வசைமொழி யெனினுமாம். காதொரு குழையோன் - ஒரு காதிலே குண்டலத்தையும் மற்றொரு காதிலே குழையையும் அணிந்தவன். இளவல் - இளமையுடையவன்; அல் - பெயர்விகுதி. ஆ - ஆறு என்பதன் விகாரம். இச்சொல் இங்ஙனம் விகாரப்பட்டு வரும் போது பலவிடங்களில் 'என்னே' என்பது தொக்குநிற்றலை நூல்களிற் காணலாம். (140) 141.- அனைவரும் கேட்பவியாசமுனிவன் சிசுபாலனது பழைய வரலாற்றை யெடுத்துக் கூறத்தொடங்குதல். அதிசயித்திவ்வாறிருந்துழியிருந்தோரனைவருமாழி யான்றன்னைத், துதிசெயத்தருமன்சுதன்முதலெவருந்தொழுதெதிர் வந்துவந்திறைஞ்ச, விதியெனப்பொருதவெங்களத்திடையவ் வியாதமாமுனியெடுத்துரைப்ப, மதியுடைக்கடவுள்வீடுமன் முதலாமன்னவர்யாவருங்கேட்டார். |
(இ-ள்.) இ ஆறு அதிசயித்து இருந்த உழி - இப்படி ஆச்சரியமடைந்திருந்த போது, இருந்தோர் அனைவர்உம் ஆழியான் தன்னை துதி செய - அங்கிருந்த அரசர் அந்தனன் முதலியோ ரெல்லாரும் கண்ணபிரானைத் தோத்திரஞ்செய்ய, தருமன் சுதன் முதல் எவர்உம் எதிர் வந்து வந்து தொழுது இறைஞ்ச - தருமபுத்திரன் முதலான பாண்டவர்களெல்லாரும் கண்ணபிரானெதிரில் வந்து வந்து கைகூப்பி வணங்க,- விதி என பொருத வெம்களத்திடை - ஊழ்வினைப்பயனென்னும்படி போர் செய்த கொடிய அந்த யுத்த களத்திலே, அ வியாத மா முனி எடுத்து உரைப்ப - அந்த வேத வியாசமகாமுனிவன் (கண்ணனைப்பலவாறு நிந்தித்து அழிந்த சிசு பாலனது உடலினின்று ஒரு சோதி எழுந்து கண்ணனது திருவடியிற் சேர்ந்ததற்குக் காரணமான வரலாற்றை) எடுத்துச் சொல்ல, மதி உடை கடவுள் வீடுமன் முதல் ஆம் மன்னவர் யாவரும் கேட்டார் - சிறந்த அறிவுடைய தெய்வத்தன்மையுள்ள பீஷ்மன் முத |