வேந்தர்உம் - (மத்ஸ்யதேசத்து அரசனான) விராடனும் (பாஞ்சால தேசத்து அரசனான) யாகசேனனும் முதலான அரசர்களும், தம்பதி புகுந்தார் - தம்தம் நகரத்துக்குப் போய்ச் சேரலானார்கள்; சராசனம் தட கை சல்லியன் முதலோர் - வில்லையேந்திய பெரிய கையையுடைய (மத்திரதேசத் தரசனான) சல்லியன் முதலிய அரசர்களும், கிளையுடன் - சுற்றத்தாருடனே, தம் புரம் சார்ந்தார் - தங்கள் நகரத்துக்குப்போய்ச் சேரலானார்கள்; (இங்ஙனம் வந்தவரனைவரும் மீள), பராவு அரு முதன்மை பாண்டவர் - துதித்தற்கு அரிய தலைமையையுடைய பாண்டவர்கள், கடல்பார் பண்பு உறதிருத்தி ஆண்டு இருந்தார் - கடல் சூழ்ந்த நிலவுலகத்தை நன்மையமையும்படி சீர்திருத்தஞ்செய்து அவ்விடத்திலே [இந்திரப்பிரத்தநகரத்திலே] அரசாண்டு கொண்டிருந்தார்கள்; (எ - று.) இரட்டுறமொழிதலென்னும் உத்தியால், 'ஆண்டு' என்பதற்கு அவ்விடத்தில் என்றும், அரசாட்சி செய்து என்றும் இருபொருள் கொள்ளப்பட்டன. தம்நகர் அடைந்தார், தம்பதி புகுந்தார், தம்புரம்சார்ந்தார் என்ற வெவ்வேறு சொற்றொடர்கள் ஒருபொருளனவாய் வந்தது, பொருட்பின்வருநிலையணி. 'அரா' என்ற குறியதன்கீழ் ஆ குறுகாது 'அம்' சாரியைபெற்று, அராவம் என்று நின்றது. அராவக்கொடியோன் என்ற தொடர் - பாம்புபோலக் கொடியவனென்றும் பொருள்படும். யாகசேநன் என்பது, துருபதனது மற்றொரு பெயர்; இவன், திரௌபதியின் தந்தை. சல்யன் - (பகைவர்க்கு) அம்பு நுனிபோல் (வருத்தஞ்செய்)பவன்; சல்யம் - அம்புமுனை. இவன், பாண்டு மகாராசனது இரண்டாம் மனைவியான மாத்திரியின் உடன்பிறந்தவனாதலால், நகுல சகதேவர்க்கு மாமனாவன். சராஸநம் என்ற வடசொல் சர அஸநம் என்றுபிரிந்து - அம்புகளைத் தள்ளுவது என்றும்; சரஆஸநம் என்று பிரிந்து - அம்புகளை (த் தொடுத்தற்காக) வைத்தற்கு இடமாவது என்றும் காரணப் பொருள்படும். பண்பாவது எல்லாரியல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல். "பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்." என்றார் கலித்தொகையிலும். 'கிளையுடன் தம்புரஞ்சார்ந்தார் என்றவிடத்து 'தமருடன் தம்புரஞ் சார்ந்தார்' என்று சிலபிரதிகளிற் பாடல் காணப்படுகிறது. (152) 153.-தருமபுத்திரனதுகொடைச்சிறப்பு. முன்குலத் தவர்க்கு முனிகுலத்தவர்க்கு மும்மதக் கைம்முகக்களிற்று, மன்குலத் தவர்க்கும் வான்குலத் தவர்க்கும் வரம்பிலா வகைக்கலை தெரியு, நன்குலத் தவர்க்கும் பொருளெலாநல்கி நாடொறும் புகழ்மிக வளர்வான், றன்குலக் கதிர்போற்றேய்ந்தொளி சிறந்தான் றண்ணளித் தருமரா சனுமே. |
(இ -ள்.) தண் அளி தருமராசன்உம் - குளிர்ச்சியான கருணையையுடைய தருமபுத்திரனும்,-முன் குலத்தவர்க்குஉம் - (நால்வகை வருணத்துள்ளும்) முதல்வருணத்தவரான அந்தணர்களுக்கும், முனிகுலத்தவர்க்குஉம் (அவர்களுள்ளுஞ் சிறந்தவர் |