இலக்கணை. கூறலுற்றாம் - கவிகளுக்குரிய இயற்கைத் தனித் தன்மைப்பன்மை. இதுமுதல் ஐம்பத்தொரு கவிகள் - பெரும்பாலும் ஒன்று நான்காஞ்சீர்கள் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். இவற்றில் மூன்று ஆறாஞ்சீர்கள் தேமாச்சீர் களாகவே நிற்கும். (155) 3.-துரியோதனன் தம்பியரோடும்மற்றுமுள்ளாரோடும் அத்தினாபுரி சேர்தல். கணைவரும் வரிவில்வாழ்க்கைக் கடுங்கன லனைய தோற்றத் துணைவருந் தானுங் கங்காசுதனுமற் றெவருஞ் சூழ இணைவரு மரச ரில்லா விகலரியேறு போல்வான் கிணைவரு மோதை மூதூர்க்கிளர்நெடும் புரிசை புக்கான். |
(இ -ள்.) இணை வரும் அரசர் இல்லா - (தனக்கு) ஒப்பாக அமைகிற அரசரொருவரையும் பெறாத [எல்லா அரசர்களைக் காட்டிலும் உயர்ந்த] இகல் அரி ஏறு போல்வான்-வலிமையுள்ள ஆண் சிங்கத்தை யொத்தவனாகிய துரியோதனன்,-கணை வரும் - அம்புகள் (தம்மிடத்தினின்றும்) வெளிவரப் பெற்ற, வரி வில் - கட்டமைந்தவிற்களினாற் செய்யும் போர்த்தொழிலாகிய, வாழ்க்கை - வாழ்க்கையையும், கடுங்கனல் அனைய தோற்றம் - கொடிய நெருப்புப்போன்ற [உக்கிரமான] தோற்றத்தையுமுடைய, துணைவரும்-(தனது) தம்பிமார்களும், தானும்-தானுமாக, - கங்கா சுதனும் - கங்கையின் புத்திரனான வீடுமனும், மற்று எவரும் - பற்றுமுள்ள கர்ணன் முதலியவர்களும், சூழ- (தன்னைச்) சூழ்ந்துவர,- கிணைவரும் ஓதை-மருதப்பறையினின்று எழுகின்ற ஓசையையுடைய, முது ஊர் - பழமையான அத்தினாபுரியினது, கிளர்நெடும் புரிசை-விளங்குகின்ற நீண்ட மதிலின் உட்பக்கத்தில், புக்கான் - சென்று சேர்ந்தான்; (எ - று.) இச்செய்யுள் - "அராவவெங்கொடியோ னாதியாவுள்ள வரசருந் தந்நகரடைந்தார்" என்று கீழ்ச்சருக்கத்தில் வந்துள்ளதன் அநுவாதம்; தொடர்ச்சி தோன்றக் கூறியது: கூறியதுகூறலன்று. வாழ்க்கை - மகிழ்ச்சியாகச் செய்யுந் தொழில். எப்பொழுதும் மாறாத சினத்தையுடையரா யிருத்தலால், துரியோதனனது துணைவர்க்கு 'கடுங்கனலனைய தோற்றம்' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. அரியேறுபோல்வான் - தன்னையெதிர்த்த அரசர்களாகிய யானைகளை அழிக்கவல்ல சிங்கம் போன்றவனென்க. மிருகராஜனாகிய சிங்கம்போலத் தனது திறத்தினால் ராஜ ராஜனாயுள்ளவ னென்றவாறுமாம். கிணை - மருதநிலப்பறை. ''புரிசை" என்ற மதிலின் பெயர், இங்கு அரண்மனைக்கு இலக்கணையென்க. துணைவரும் தானும் புக்கான் - சிறப்பினால் ஒருமை முடிபைக்கொண்ட பால்வழுவமைதி: [நன் - பொது-27.] அனைய-குறிப்புப்பெயரெச்சம்: அன் - இடைச்சொற்பகுதி. |