8.- துச்சாசனன் வார்த்தை. சொல்லிடை நஞ்சு கக்குந்துன்மதி யுடைய தம்பி வில்லிடை நின்று தம்முன்வெம்மனங் களிக்கச் சொன்னான் அல்லிடை நிறைந்த தேனுமமுதவெண் கிரணத் திங்கள் எல்லிடை யிரவி முன்னரெவ்வுழி நிகர்க்கு மென்றே. |
(இ -ள்.) சொல் இடை நஞ்சு கக்கும் துன்மதி உடைய தம்பி - சொல்லுஞ்சொற்களிலே விஷஞ்சொரியும்படியான [மிகக் கொடிய சொற்களையுடைய] தீய அறிவுள்ள தம்பியாகிய துச்சாசனன்,-வில் இடைநின்று - (துரியோதனனுக்கு எதிரில்) விற்கிடை தூரத்தில் நின்றுகொண்டு, 'அல்லிடை நிறைந்தது ஏனும்-இராக்காலத்தில் ஒளிமிக்கு விளங்குவதாயினும், வெள்அமுதம் கிரணம் திங்கள் - வெண்மையாகிய அமிருதமயமான ஒளியையுடைய சந்திரன்; எல்லிடை - பகற்காலத்தில், இரவி முன்னர் - சூரியனது எதிரில், எ உழி நிகர்க்கும் - எவ்வாறு ஒத்திருக்கும்?' என்று-, தம்முன் வெம் மனம் களிக்க - தமையனாகிய துரியோதனனது கொடிய மனம் மகிழ்ச்சியடையுமாறு, சொன்னான்-; (எ - று.)- ஏ - ஈற்றசை. இராக்காலத்திலே நட்சத்திரக்கூட்டங்களிடையிற் சந்திரன் ஒளி மிக்குத்தோன்றினாலும் பகற்காலத்திலே சூரியனொருவனுக்கு முன் ஒளி மழுங்குதல்போல, தருமபுத்திரன் பல சிற்றரசர்களிடையில் மிக்க மேம்பாடு பெற்று விளங்கினாலும் ராஜராஜனான துரியோதனனாகிய உனக்கு முன்னே சிறிதும் மேன்மை பெற்று விளங்கானென்பது, பின்னிரண்டடிகளின் கருத்து; உபமானமே உபமேயக்கருத்தை விளக்கிநிற்றலால், பிறிதுமொழிதலணி. நாம் அடங்கியிருக்கிற இச்சமயத்தில் தருமபுத்திரன் சிறப்புற்று விளங்கினாலும், நாம் வெம்மையோடு எழுமிடத்து அவன் அடங்கியேவிடுவ னென்ற குறிப்பு, இது. 'சொல்லிடைநஞ்சு கக்குந் துன்மதியுடைய' என்ற அடைமொழியினால், 'தம்பி' என்றது-எல்லாத் தம்பிமார்களினும் மிக்க கொடுமையையுடையவனான துச்சாசனனைக் குறித்தது: ஆகவே, துரியோதனன், கர்ணன், சகுனி, துச்சாசனன் என்ற துஷ்டசதுஷ்டர்கள் கீழ் 5 - ஆஞ் செய்யுள் தொடங்கி முறையே கூறப்பட்டுள்ளவாறு காண்க. வில் இடை - ஒருவில் கிடத்தற்கு உரிய இடம்; அது, நான்கு முழதூரமுள்ளது. சந்திரன் அமிருத கிரண னாதனாலால், 'அமுத வெண் கிரணத்திங்கள்' எனப்பட்டான். கிரணம் - தற்சமவடசொல். தம்பி, தாம்-பகுதி, பி - முறைப்பெயர்விகுதி. முன் - காலவாகு பெயர். (161) 9.-துரியோதனன் பேசத்தொடங்குதல். தமையனுந் தம்பி சொன்ன தன்மையையுணர்ந்து நீதி அமைதரு தந்தை கேட்பவவன்பெருந் தாதை கேட்பக் கமைபெறு விதுரன் கேட்பக்கார்முகக் கன்னன் கேட்ப இமையவன் றுரோணன் கேட்பயாவருங் கேட்பச் சொல்வான். |
|