விதுரனும் மற்ற அமைச்சர்களும் துரோணனது சொல்லை அநுசரித்துத் தாமும் 'நீ தான் இப்பொழுது ஆராய்ந்து ஆலோசனை சொல்லத்தக்கவன்; எங்களுடையபேச்சை நால்வரும் அங்கீகரிக்கமாட்டார்கள்; ஆனால், நீ சொல்லுகிற மொழி நீதிக்குச் சிறிதும் மாறுபடாதிருக்குமாறு ஆராய்ந்து சொல்' என்றுகூற, திருதராஷ்டிரன் தன்மனம் போனபடி சிறிதும் நியாயத்திற்குக் கட்டுப்படாமற் கூறத்தொடங்கின னென்றவாறு. தான்பெற்ற புதல்வரைக் காட்டிலும் பேரன்புடன் வளர்த்த பஞ்சபாண்டவர் திறத்தில் இப்போது சிறிதும் அருளில்லாது நிர்த்தாட்சிணியமாகக் கூறுகின்றானாதலால், அவனை 'மனம் கற்குன்றன்னான்' என்றார். தன்மன்-தர்மன்: தர்மபுத்திரன். (426) 274.- திருதராஷ்டிரன்தருமபுத்திரனுக்கு இட்ட கட்டளை. உன்னுணர் வுனக்கே யுள்ளதுன்பெருந் துணைவ ரான கொன்னுனை வேலோர் வென்றுகொண்டன கொடுத்த லொல்லார் பின்னுற வுரிமை யாவும் பெறுதிநின் பெருமைக் கேற்ப முன்னுளோர் பலருஞ் செய்தமுறைமையே முன்னு கென்றான். |
(இ -ள்.) (திருதராஷ்டிரன் தருமபுத்திரனை நோக்கி), 'உன் உணர்வு உனக்கே உள்ளது - உன்னுடைய நல்லுணர்வு உன்னொருவனுக்கே உள்ளதாகும்; உன்பெருந் துணைவர் ஆன கொல்நுனை வேலோர் - உனது பெரிய சகோதரர்களும் (பகைவரைக்) கொல்லவல்ல கூர்மையான வேலாயுதத்தை யுடையவர்களுமாகிய துரியோதனாதியர், வென்று கொண்டன - (தாம் சூதாடி) வென்று கொண்ட பொருள்களை, கொடுத்தல் - கொடுப்பதற்கு, ஒல்லார் - உடன்படார்; (ஆதலால்), நின்பெருமைக்கு ஏற்ப - உனதுகௌரவத்திற்குத் தக்கபடியாக, முன் உளோர் பலரும் செய்த முறைமையே முன்னுக - பூர்விகர் பலரும்செய்த முறைப்படியே (செய்யுமாறு) எண்ணுவாயாக; பின் உற உரிமை யாவும் பெறுதி - பிறகு உனக்கு உரிய இராச்சியம் முதலிய பொருள்களையெல்லாம் பெறுவாயாக,' என்றான் - என்று கூறினான்; (எ - று.) நீயே உண்மையறிவு முதிர்ந்துள்ளவ னாதலால், பெரியோர் மொழிப்படியே நடப்பாய்: எனது மைந்தரோ எனது மொழிப்படி இராச்சியத்தை மீளக்கொடுத்தற்குச் சம்மதிக்கின்றிலர்: ஆதலால், நீ சிறிதுகாலம் காட்டில் வசித்து மீண்டு உனக்கு உரியபொருள்களை யெல்லாம் பெறலா மெனத் திருதராட்டிரன் கூறின னென்க. உன்னுணர்வு உனக்கே உள்ளது - உன்னைப்போன்ற விவேகிகள் இவ்வுலகத்துப் பிறரில்லை யென்றவாறு. இனி, உன் உணர்வு என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, உன்னுகின்ற உணர்வு எனப் பொருள்கூறி, பந்தயம் வைத்துத் தோற்ற பொருள்கள் தனக்கு உரியனவாகாமையை நீயே நன்கறியுந் திறமுடையாயாதலால், அவற்றை வென்றவர் (துரியோதனாதியர்) மீளக் கொடாமையைக் குற்றமென்று கொள்ளாதிருக்கவேண்டுமெனக் கூறியதாகக் கருத்து விரித்துரைத்தலுமொன்று. இப்பொழுது |