பெருந்துணைவராகிய துரியோதனாதியர்க்கு உனது இராச்சியத்தைக் கொடுத்துவிட்டு, உனது தம்பியரோடும் மனைவியோடும் காட்டிற் சில வருஷங்கள் தங்கியிருந்து பின்னர் மீண்டுவந்து இராச்சியத்தை அரசாளலாம்' எனத் தருமனுக்குத் திருதராஷ்டிரனது சொல்லை விளங்க உரைத்தன னென்க. 'முன்னுளோர் பலருஞ் செய்த முறைமையே முன்னுக' என்று திருதராஷ்டிரன் கூறினனாதலால், அதன் பொருள் விளங்குமாறு இராமபிரானது சரித்திரத்தைத் துரோணன் எடுத்துக் காட்டினன். திரௌபதிக்குத் திருதராஷ்டிரன் கொடுத்த இரண்டு வரங்களால் தமது அடிமைத் தன்மையினின்று நீங்கிச் சூதிலிழந்த இராச்சியத்தையும் பெற்ற பாண்டவர்கள் தமது இந்திரப்பிரத்த நகரத்தை நோக்கிச் செல்வதைக் கண்டு துச்சாதனன் மனம் பொறாமல் துரியோதனனிடத்து முறையிடவே, பின்பு துஷ்ட சதுஷ்டர்கள் ஒருங்குசேர்ந்து திருதராஷ்டிரனிடத்தைச் சார அவர்களுள் துரியோதனன் பலவாறு அத்தந்தையினிடத்துக் குறைகூறி முடிவில் அவனாற் பிராதிகாமியைக்கொண்டு பாண்டவர்களை மீண்டுஞ் சூதாடுமாறு அழைப்பிக்க, அப்பொழுது தருமபுத்திரன் சகுனியின் மாயையை யறிந்திருந்தும் அதற்குஉடன்பட்டு 'இராமபிரான் பொன்மயமான மான் அஸம்பாவிதமென்பதை யுணர்ந்திருந்தும் அப்பொன்மானைப் பிடிக்க விரும்பினானன்றோ! ஆகையால், விதி வலிது' என்று கூறித் தம்பியரோடு திரும்பிவர, சகுனி 'இச்சூதாட்டத்தில் தோற்றவர் தமது இராச்சியத்தை விட்டு மான்றோல் தரித்துக்கொண்டு பன்னிரண்டு வருஷம் வனவாசமும், ஒருவருஷம் தன்னைச் சார்ந்த சனங்களால் அறியப்படாமலிருத்தலாகிற அஜ்ஞாதவாசமுஞ் செய்யவேண்டும்; இவ்வாறு அஜ்ஞாதவாசஞ் செய்யும்போது அறியப்பட்டால், மீண்டும் பன்னிரண்டுவருடம் வனவாசஞ் செய்யவேண்டியதே: இவ்வாறு வசித்துப் பதின்மூன்று வருஷங் கழித்து வந்தால், இராச்சியத்தைப் பெறலாம்' என்ற ஏற்பாட்டுடன் சூதாடச்சொல்ல, வீடுமன் துரோணன் முதலியோர் பலரும் தடுக்கவும் கேளாமல் தருமன் அந்நிபந்தனைக்கு உடன்பட்டுச் சூதாடித் தோற்க, பின்பு பாண்டவர்களெல்லாரும் பலவாறாகப் பிரதிஜ்ஞை செய்து திருதராட்டிரன் முதலியோரிடத்து விடைப்பெற்றுக் காடு சென்றனரென இவ்விடத்து முதனூல் கூறும். (428) 276.- இதுவும் அது. அரிவையோ டகன்று நீவி ரைவருமடவி யெய்திச் சுரர்தின மீரா றங்கட் டுன்னுதிர்மன்னு நாட்டின் ஒருவரு மறியா வண்ண மொருதினமுறைதி ருங்கள் பெருவிற லரசும் வாழ்வும்பின்னுறப் பெறுதி ரென்றான். |
(இ -ள்.) நீவிர் ஐவரும் - நீங்கள் ஐந்துபேரும், அரிவை யோடு - திரௌபதியுடன் கூட, அகன்று-(நாட்டை) விட்டுப் புறப்பட்டு, அடவி எய்தி- காட்டைச் சேர்ந்து,-அங்கண்-அவ்விடத் |