பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 414

யால் அவனிடத்து வெறுப்புற்றிருந்தனரென்பது தோன்ற 'கொற்றமாநகரிமாக்கள்
தழலெனவுயிர்த்துமாழ்கி'என்றார்.                                 (436)

284.-தருமபுத்திரனது குணத்தின்சிறப்பு.

நாட்டிடை யெல்லை பொற்றா ணறுமலர்சிவக்க வேகிக்
காட்டிடை புகுந்த போதுங்கலக்கமற் றுவகை கூர்ந்தான்
கூட்டிடை யின்ப துன்பக்கொழும்பயன் றுய்த்தி மாறி
வீட்டிடை புகுதும் போதுமெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.

     (இ -ள்.) கூட்டிடை - இந்தவடம்பில், இன்பம் துன்பம் கொழும் பயன்
துய்த்து - மிக்க இன்பத்தின்பயனையும் துன்பத்தின் பயனையும் அநுபவித்து,
மாறி - (கருமவசப்பட்டிருக்கும்அந்நிலைமையினின்று)நீங்கி, வீட்டிடை
புகுதும்போது-முத்தியுலகத்திற் சென்று சேரும் பருவத்தை யடைந்துள்ள,
மெய்மகிழ் - உண்மையாக மகிழ்கின்ற, விபுதர்-முக்தர்களை, போல்வான் -
ஒப்பவனானதருமபுத்திரன்.-நாட்டிடை எல்லை-நாட்டினிடத்திலுள்ள
எல்லைமுழுவதும், நறுமலர் பொன்தாள்-வாசனையுள்ள தாமரை
மலர்போன்ற (தனது) அழகிய பாதங்கள், சிவக்க - (அடிவைத்துஊன்றுதலாற்)
செந்நிறமடைய, ஏகி - நடந்துசென்று, காட்டிடை புகுந்த போதும்-
காட்டிற்குச்சென்றபொழுதும், கலக்கம் அற்று - (மனத்திற்) கலக்கம்ஒழிந்து,
உவகை கூர்ந்தான் -மகிழ்ச்சி மிக்கவனானான்;  (எ - று.)

     யானை முதலிய வாகனங்களின் மீது ஊர்ந்து செல்லுந் தருமபுத்திரன்
இப்பொழுது கால்களால் நடந்துசென்றானென்பதாம்.  இதற்குமுன் இவ்வாறு
நடந்துசெல்லும் பயிற்சியில்லாமையால், பாதங்கள்செந்நிறமடைந்தன. 
மோட்சத்தைப்பெறும் பக்குவ நிலைமையை யடைந்த பெரியோர் தமக்குப்
பரகதிஎப்பொழுது கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டு கடவுளைத்
தியானித்தலால் எப்பொழுதும்நிரம்பிய நெஞ்சத்தராய் இவ்வுலகத்து
இன்பதுன்பங்களை ஒருபொருட்டாக மனத்திற்கொள்ளாமலிருப்பது போல,
தருமபுத்திரனும் இவ்வுலக இன்பதுன்பங்களை ஒரு பொருட்டாக
நினையாதிருந்ததனால், அவனை, 'கூட்டிடை இன்பதுன்பக்கொழும்பயன்றுய்த்து
மாறி, வீட்டிடைப்புகுதும்போது மெய்ம் மகிழ்விபுதர் போல்வான்' என்றார்;
இவ்வாறு இருப்பவர் 'ஜீவந்முக்தர்'எனப்படுவர்; "அரசரோடிருந் துலகவரசாட்சி
புரிந்திடினு மங்கையேற்றுத், தெருவுதோறலைந் திரந்துதின்றிடினு மிளம்
பருவத் தெரிவைமாரைப், பிரியாமலிருந்திடினு பிரிந்து தவம்
புரிந்திடினும்பேசிற்றெல்லாம், விரிசீவன்முக்தருக்கிங்குடம்பாடேயன்றி
யொன்றும் விரோதமில்லை"என்பதனால் அவர்களின் தன்மை
இன்னதென்பதை யுணர்க.  பறவைகள் சிலகாலம் தங்குவதற்கு
ஏற்றகூடுபோல, இவ்வுடம்பு, உயிர் சிலகாலம் கூடியிருத்தற்கு இடமாய்
நிற்றலால், 'கூடு' என்றேகுறிக்கப்பட்டது.                         (437)

சூதுபோர்ச்சருக்கம் முற்றிற்று.

சபாபருவம் முற்றுப்பெற்றது.