பக்கம் எண் :

இராயசூயச் சருக்கம் 5

     இங்ஙனம் துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலன சீலனான எம்பெருமான்
விஷயமாக வணக்கம் கூறியதனால், கவி தாம் தொடங்கிய காரியம்
இடையூறின்றி இனிதுமுடியு மென்பது கருத்து.  இப்பாட்டு மொழிமாற்று
முதலியன இன்மையால், யாற்றுநீர்ப்பொருள்கோள்.

     இதுமுதற் பதினேழு கவிகள் - பெரும்பாலும் முதல்நான்கு சீரும்
காய்ச்சீர்களும் மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு
கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.                        (1)

        2. - பாண்டவர்கள்முன்னிலையில் மயன் வந்து
            ஒன்றுசொல்லத் தொடங்குதல்.

வியனும்பர் பலகணமுஞ்சுரபதியுஞ் சென்றெழில்
                             கொள்விசும்பின் மேவ,
நயனங்கண் முதலான வைம்புலனுமனமும்போனகரி யெய்திப்,
பயன் மிஞ்சு தொழிலினராய்ப்பாண்டவருந் திருமாலும்
                              பயிலும் வேலை,
மயனென்பான்வாய்புதைத்து வளம்படவந்தொருமாற்றம்
                              விளம்பி னானே.

     (இ-ள்.) வியன் உம்பர் பல கணம்உம் - மேலான பலவகைப்பட்ட
தேவர்களின் கூட்டமும், சுரபதிஉம் - அத்தேவர்கட்கெல்லாம் அரசனான
இந்திரனும், சென்று - (அருச்சுனனோடு போர்செய்தலையொழிந்து) போய்,
எழில் கொள் விசும்பின் மேவ-அழகு கொண்ட சுவர்க்கலோகத்திற்சேர, -
பாண்டவரும் - பஞ்சபாண்டவர்களும், திருமாலும் - ஸ்ரீமகாவிஷ்ணுவின்
அவதாரமான கண்ணபிரானும், நகரி எய்தி - இந்திரப்பிரத்த நகரத்தைச்
சேர்ந்து, பயன் மிஞ்சு தொழிலினர் ஆய் - நற்பயன் மிக்க செயல்களை
யுடையவர்களாய், நயனங்கள் முதல் ஆன ஐம்புலன்உம் மனம் உம் போல்
பயிலும் வேலை - கண்கள் முதலிய பஞ்ச இந்திரியங்களும் (இவற்றைப்
புலன்களிற் செலுத்துகின்ற) மனமும்போல ஒற்றுமைகொண்டு கூடியிருக்குங்
காலத்தில்,-மயன் என்பான் - மயனென்கிற அசுரத்தச்சன், வந்து-(அவர்கள்
முன்னிலையில்) வந்து, வாய் புதைத்து - ((கையினால்) வாயை மூடிநின்று,
வளம்பட ஒரு மாற்றம் விளம்பினான்-சிறப்பாக ஒரு வார்த்தையைச்
சொல்லலானான்; (எ - று.)-அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க.

     'வியனும்பர் பலகணமுஞ் சுரபதியுஞ் சென்றெழில்கொள் விசும்பின் மேவ'
என்றது, கீழ்ச்சருக்கத்தில், "துன்றுதன்சேனைச் சுரகணஞ்சூழச் சுரபதி துறக்கம
தடைந்தான்" என்றதன் அநுவாதம்;  தொடர்ச்சி தோன்றக் கூறியது.

     ஐம்பொறிகளையும் உரிய புலன்களிற் செலுத்தி ஒற்றுமைப்பட்டு நிற்கும்
மனம்போலப் பஞ்சபாண்டவர்களையும் உரிய தொழில்களிற் பிரவேசிக்கும்படி
கண்ணபிரான் பிரேரேபித்து அவர்களைக்கொண்டு தொழில்செய்விக்கின்ற
தலைமையும் ஒற்றுமையும் தோன்ற, 'ஐம்புலனும் மனமும்போல் பாண்டவரும்
திருமாலும்