பிந்துஸரஸ்: இது - கைலாசகிரியின் வடக்கில் மைநாகபர்வதத்தைச் சார்ந்த இரணியசிருங்க மென்னுங் குன்றிலுள்ளது. பொய்கை - மானிடராக்காத நீர்நிலை. தன் - சாரியை. (4) 5. - மிகப் பல ஏவலாளர்கள்இரத்தினங்களை எடுத்துக்கொண்டு வருதல். என்பதன்முன் முப்பதின்மே லிரட்டிகொணூறாயிரவ ரெடுத்த பாரம், வன்புடனே தரித்துவரை யசைந்தாலு மசையாதவயிரத்தோளா, ரன்புமிகும் விழிக்கருணை யறன்புதல்வ னேவலினா லசுரத்தச்சன், றன்பணியீ தெனப்பணிப்ப வொருநொடியிற்கொடுவந்தார் தளர்விலாதார். |
(இ -ள்.) என்பதன்முன் - என்று (மயன்) சொன்னதற்கு முன்னே [சொன்னவுடனே யென்றபடி],- அன்பு மிகும் விழிகருணை அறன் புதல்வன் ஏவலினால் - அன்புநிறைந்த கண்ணருளையுடைய தருமபுத்திரனது ஆஜ்ஞையைக்கொண்டு, - அசுரத்தச்சன்தன் பணி ஈது என பணிப்ப - அசுர சிற்பியான மயன் தனது காரியம் இதுவென்று கட்டளையிட, வரை அசைந்தாலும் அசையாத வயிரம் தோளார்-மலைநெகிழ்ந்தாலும் நெகிழாத மிக்க உறுதியுள்ள தோள்களை யுடையவர்களும், தளர்வு இலாதார் - (தொழில் செய்தலில்) தளர்ச்சியில்லாதவர்களுமான, முப்பதின் மேல் இரட்டிகொள் நூறு ஆயிரவர் - அறுபதுலக்ஷம்பேர், எடுத்த பாரம் வன்புடனே தரித்து - (தாம் தாம்) எடுத்த (நவரத்தினங்களாகிய) பெரும்பாரச் சுமைகளை வலிமையோடு தாங்கி, ஒரு நொடியில் கொடு வந்தார் - ஒருமாத்திரைப் பொழுதிலே கொண்டு வந்து சேர்ந்தார்கள்; (எ - று.) 'என்பதன்முன் அறன்புதல்வ னேவலினால்' என்று காரியத்தை முன்னும் காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகக் கூறியது, மிகையுயர்வுநவிற்சியணி; இது, காரியவிரைவைச் சொல்வது. முப்பதின்மேலிரட்டி - முப்பதை இரண்டினாற் பெருக்கியதொகை; எனவே, அறுபதாயிற்று. முப்பதுக்குமேல் இரண்டு கூடியதென்று கொண்டால், முப்பத்திரண்டு என்றாகும். பிறர்மேற் கண்சென்றவிடத்து அருள்நிகழ்வதனாலும், மனத்து நிகழுங் கருணையின் குறிப்புக் கண்ணின் உவந்தநோக்கத்திற் புலனாதலாலும், 'விழிக்கருணை' எனப்பட்டது. நொடி - இயல்பில் ஒருமுறை கைந்நொடித்தற்கு வேண்டும்பொழுது. கொடு-கொண்டு என்பதன் விகாரம். ஈது-இது என்பதன் சுட்டு நீண்டது. 'எடுத்த பாரம் வன்புடனே தரித்து' என்றது, அவர்களெடுத்த இரத்தின பாரத்தின் மிகுதியை யுணர்த்தும். (5) 6. - மயன் மண்டபங் கட்டத் தொடங்குதல். மீதடுக்கிப் பசும்பொன்னாற்சுவர்செய்து மரகதத்தூண் வீதிபோக்கி, யோதிடத்திற் சுருங்காமற் செழுந்துகிருத் திரம்பரப்பி யுலகோரேழு, மாதிடத்தான்வைகுதற்குவாய்க்குமதோ விதுவென்ன |
|