ஆடித்திருமுகம்- பிறராற்காணப்பட்டுத் தன்னைத்தான் காணமாட்டாத கண்ணாடிபோன்றுபிறராற்காணப்பட்டுத் தன்னைத்தான் காணமாட்டாது செல்வப்பொலிவு தோன்றும்முகம். நாமோபெறுவோம் - உயர்வுபற்றிவந்த தன்மைப்பன்மை;ஓகாரம் எதிர்மறை முகத்தால், உயர்வை விளக்கிற்று. துயில்கொள்ளுதல் - உற்சாகங்குன்றி வருந்தி வாடிக்கிடத்தல். (165) 166.-சூரியோதய வருணனை. அக்காலையில்விசயன்றனதிடராரிருளகலச் செக்காவியுமரவிந்தமும் வரிவண்டொடுதிகழ மைக்காரிருள்வெள்ளம்பில வள்ளத்திடைவடியத் தொக்கானுயர்குணதிக்கினி லகிலந்தொழுசூரன். |
(இ - ள்.) அகாலையில்- அந்தக்காலத்தில், விசயன் தனது இடர் ஆர் இருள் அகல - அருச்சுனனது துன்பமாகிய நிறைந்த இருள் நீங்கவும்,- செக்காவிஉம் அரவிந்தம்உம் வரி வண்டொடு திகழ - செங்கழுநீர்மலர்களும் தாமரைமலர்களும் இசைபாடுதலையுடைய வண்டுகளுடனே அலர்ந்து விளங்கவும், மை கார் இருள் வெள்ளம் பிலம் வள்ளத்திடை வடிய - மையையொத்துக் கருமையான இருளினதுதிரள் பாதாளலோகமாகிய கிண்ணத்திலே செல்லவும்,-அகிலம் தொழு சூரன் - உலகத்தவ ரெல்லாராலும் வணங்கப்படுகின்ற சூரியன், உயர் குண திக்கினில் - உயர்ந்த கிழக்குத் திசையில், தொக்கான் - வந்து சேர்ந்தான் [உதித்தான்]; (எ-று.) மறுநாட்காலையில்இந்திராதிதேவர்களின் வேண்டுகோளினால் ஊர்வசியினது சாபத்தாலாகிய பேடிவடிவம் அருச்சுனன் வேண்டும்நாளில் ஒரு வருஷகாலம் வரும்படி வரமாக மாறுதலைக்கருதி 'விசயன்தனதிடராரிருளகல'என்றார். செக்காவி - செங்காவியென்பதன் வலித்தல். செங்கழுநீரும் தாமரையும் இரவிற்குவிந்து பகலில் மலர்பவை. வரி - உடம்பிலுள்ள கோடுமாம். இனி, வரி வண்டு என்பதைச் சிலேடையாக்கொண்டு, செங்குவளைநீண்ட அம்பொத்துக் குவிந்துவிளங்கவும், அரவிந்தம் இசைவண்டுடனே அலர்ந்து விளங்கவும் என்பாருமுளர். வண்டு - அம்பும், அறுகாற் பறவையும். பிலவள்ளம் என்றது - கிண்ணம்போல உள்ளாழமாகிய சுரங்கத்தை;பகலிலும் அவ்விடங்களிலே இருள்நிறைந்திருக்கு மென்க. சூரன்=ஸூரன்; அகிலந்தொழுசூரன்="பலர்புகழ்ஞாயிறு"என்பது, திருமுருகாற்றுப்படை. இது, தன்மை நவிற்சியணி. (166) வேறு. 167.-முப்பத்துமூவர்தேவரோடு இந்திரன் சபாமண்டபத்துவருதல். கதிரு தித்தவக் காலையின்மாமறை முதல்வர் முப்பத்து மூவருஞ் சூழ்வரப் புதல்வ னுற்ற துணரான் புரந்தரன் விதம ணிப்பணி மண்டப மேவினான். |
|