(இ - ள்.)ஆண் தகை - ஆண்மைக்குணமுள்ள இந்திரன், 'தூண்தகு தோளின் மொய்ம்பால்-தூண்களோ என்னத்தக்க புஜங்களின் பலத்தினால், நம் வலி தொலைத்து-நமதுபலத்தை அழித்து, மெல் மேல் மூண்டு எழும்- மேலே மேலே (போருக்கு) முயன்று எழுந்து வருகின்ற, அவுணர் தம்மை- அசுரர்களை,முடிப்பார்-ஒழிக்கவல்லவர், இவன் அன்றி-இவ்வருச்சுனனே யல்லாமல், யார்-யாவர் உளர்? [எவருமில்லையன்றோ?],'என்று- ,அமரர்க்கு எல்லாம்-தேவர்கள் யாவர்க்கும், அவன் செயல் அடைவு ஏ சொல்லி-அவ்வருச்சுனனது செய்தியை முறைப்படச் சொல்லி,-காண்டவம் எரித்த வீரன் இவன் என காட்டினான்-(நமது)காண்டவ வனத்தை (முன்பு) எரியச் செய்த வீரத்தன்மையுள்ளவன் இவன் தா னென்றுஞ் சொல்லிச் சுட்டிக்காண்பித்தான்;(எ-று.) இக்கவியால்,அமரரையும் அசுரரையும் ஒருபடிப்பட வெல்லவல்ல அருச்சுனனது ஆற்றல் வெளியாகின்றது. தோளின் மொய்ம்பு - ஆறாம்வேற்றுமைத்தொகை;இன் - சாரியை 'மொய்ம்பால்'என்றவிடத்து, 'முன்பால்'என்றும் பாடமுண்டு;முன்பு - வலிமை. ஆண் தகைமை - பௌருஷம். தூண்-தோளுக்கு, திரண்டு உருண்டு நீண்ட தன்மையாலும், வன்மையாலும் உவமம். தகுஎன்பதை உவமவுருபாகக்கொண்டும் உரைக்கலாம். மொய்ம்பால் தொலைத்துஎன்றாவது,மொய்ம்பால் முடிப்பார் என்றாவதுஇயைக்க, மொய்ம்பான் எனப் பிரித்து, தோள்வலிமையுடையவனாகியஎன்று உரைத்து, இவன் என்பதற்கு விசேஷணமாக்கினும் அமையும். 'நம்'எனப் பன்மையாகக் கூறினான், மற்றைத் தேவர் யாவரையும் உளப்படுத்தி. மென்மேல் - மேன்மேல்: அடுக்குத்தொடர், இடைவிடாமைப் பொருளது. வினாவடியாப்பிறந்த யார் என்னும் பலர்பாற் குறிப்புமுற்று, எதிர்மறைப்பொருள் தந்தது. ஆண்டகை - பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை;தகை - தகுதி, சற்குணம்;இது தொழிலடியாப் பிறந்ததாயினும், பொருளாற் பண்புப்பெயர். இதை அமரர்க்கு அடைமொழியாக்கிவிட்டு, கீழ்க்கவியில் 'கடவுளர்க்கிறைவன்'என்பதையே, 'காட்டினான்'என்பதற்கு எழுவாயாக்கினும் அமையும். செயல்-வெற்றிச்செய்கை:வரலாறுமாம். காண்டவமெரித்த வீரனிவனெனக்காட்டியது, தேவர்களாகிய நம்மினுஞ் சிறந்த வீரமுடையான் இவன் என்பதைத் தெரிவித்தற்கு. கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்தேறிட்டு விளையாடச்செய்தே, அக்கினிபகவான் மிகப் பசித்துவந்து, 'இந்திரனதுகாவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாதபடியாய்நிலவுலகத்தில் இருக்கின்ற காண்டவவனமென்னும் பூந்தோப்பை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்கு விருந்திடவேண்டும்'என்று வேண்ட, கிருஷ்ண அருச்சுனர்கள் அங்கேபுக்கு ஒதுங்கியிருக்கின்ற அசுரர் முதலிய துஷ்டர்களைஅழித்தருள வேண்டுமென்னும் நோக்கத்தால் 'நீஅதனைப்புசி'என்று இசைந்து |