14.-இதுமுதல்மூன்று கவிகள் - ஒருதொடர்: நிவாதகவசரின்சிறப்பைக் கூறி அவர்களையழிக்குமாறு தேவேந்திரன்வரம்வேண்டுதலைத்தெரிவிக்கும். ஆழிநீரழுவத்தென்று முறைபவராழியானும் ஊழியினாதன்றானுமுருப்பினுமுலப்பிலாதோர் ஏழிருபுவனத்துள்ளோ ரியாரையுமுதுகுகாண்போர் கோழியான்றனக்குந்தோலா வவுணர்முக்கோடியுண்டால். |
(இ-ள்.) ஆழிநீர் அழுவத்து - கடல்நீரி னிடையிலேயுள்ள (தோயமாபுரமென்னும்) நாட்டிலே, என்றுஉம் - எப்பொழுதும், உறைபவர் - வாசஞ் செய்பவர்களும், ஆழியான்உம் - (அசுரர்களைஅழித்தலில்வல்ல) சக்கராயுதத்தையுடைய திருமாலும், ஊழியின் நாதன் தான்உம் - (எல்லோருடைய) காலத்துக்குந் தலைவனாகியயமனும், உருப்பின்உம் - கோபித்து அழிக்கத் தொடங்கினாலும்,உலப்பு இலாதோர்- அழிதலில்லாதவர்களும், ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரைஉம் - பதினான்குஉலகங்களிலுள்ளவ ரெல்லோரையும், முதுகு காண்போர் - (போரிற்) புறங்காண்பவர்களுமாகிய, கோழியான் தனக்குஉம் தோலா அவுணர் - (தேவசேனாதிபதியாகிய)கோழிக்கொடியையுடைய சுப்பிரமணியக்கடவுளுக்குந் தோல்வியடையாத அசுரர்கள், மு கோடி - மூன்றுகோடி பேர், உண்டு - உளர்;(எ-று.) எல்லாப்பிராணிகளுக்கும் அவரவர் வினைக்குஏற்பஆயுட்காலத்தை வரையறைசெய்து முடித்தல்பற்றி யமனுக்குக் காலனென்று ஒரு பெய ராதலால், அதன் பொருள்பற்றி, 'ஊழியினாதன்'என்றார். இனி, சங்காரக் கடவுளாகிய உருத்திரமூர்த்தி என்று உரைத்தால், மேற் பதினாறாங்கவியில் "கற்றவர்வணக்கினாற்குங்கடக்கரும் வலியின் மிக்கோர்" என்பதனோடு கூறியது கூறலா மென அறிக. ஆழி என்னுஞ் சொல்லுக்கு - கடலைக்குறிக்கும்போது,ஆழ்ந்துள்ளது அல்லது (உலகங்களைப் பிரளயகாலத்தில்) அழிப்பது என்று பொருள்;சக்கரத்தைக் குறிக்கும் போது, வட்டவடிவாகவுள்ளது அல்லது (பகைவர்களை)அழிப்பது என்று பொருள்: அழுவம் - நீர்ப்பரப்பு:இங்கே, கடலிடை நாடு. திருமாலினது சக்கரத்துக்குச் சுதரிசனமென்று பெயர். உம்மைகள் ஆறனுள், முதலாவதும் ஐந்தாவதும் - முற்றுப்பொருளன;மற்றவை - உயர்வுசிறப்பு. இரண்டாவதும், மூன்றாவதும்-உயர்வுசிறப்புப்பொருளோடு எண்ணுப்பொருளையும்உணர்த்தின: முதுகு காணுதல்-புறங்காட்டிப் பின்னிடைந்தோடும்படி வெல்லுதல். (190) 15. | தவாதபோர்வலியின்மிக்க தவத்தினர்சாபம்வல்லோர் சுவாதமேவீசியெல்லா வுலகையுந்துளக்குகிற்போர் விவாதமேவிளைக்குஞ்சொல்லர்வெகுளியேவிளையுநெஞ்சர் நிவாதகவசத்தரென்னும் பெயருடைக்கொடியநீசர். |
|