பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்15

யினால், தனது தம்பியான  விசித்திரவீரியனது மனைவிமாரிடம் சந்ததியை
உண்டாக்கினார்.  இவ்வடசொல்-வேதங்களை வகுத்தவனென்று
பொருள்படும்.  செவ்வனம் - நேர்மையையுடைய  எனினுமாம்.  இனி,
செவ்வன முனைவன் என்பதற்கு-சிவந்த நிறத்தையுடைய முனிவனென்று
பொருள்கூறுதல் பொருந்தாது; வியாச பகவானது  திருமேனிநிறம்
கருமையாதலாலும், அதுபற்றி அவருக்குக் கிருஷ்ணனென்று  ஒருபெயர்
உண்மையாலு மென்பர்.  முனைவன் - முன்னையவன்: முன்என்பதை
முனையென்பவாகலின், முனைவனென்றவிடத்து  முனிவனென்றும் பாடம்.
வனசரிதர் - வனத்திலே சஞ்சரித்தலை யுடையவர்.  சேயவன் -
செந்நிறமுடைய  முருகக்கடவுள்: இச்சொல் - குமாரனென்பதுபோல
உவமவாகுபெயரால்,  மகனைக் காட்டும்.                       (20)

21.-வியாசனைப்பூசித்தபின்னர் தருமபுத்திரன்
துரியோதனன் செய்த வஞ்சனையை யெல்லாஞ்
சொல்லுதல்.

கண்டெதிர்சென்றுபோற்றிக் கண்ணினுஞ்சென்னிமீதும்
கொண்டனரவன்றன்பாதங் குளிர்ந்தனருயிருமெய்யும்
புண்டரநுதலினானைப் பூசனைசெய்தபின்னர்
வண்டணிதாரான்செய்த வஞ்சனையனைத்துஞ்சொன்னார்.

     (இ- ள்.)(பாண்டவர்கள்),கண்டு - (வியாசபகவானைப்)பார்த்து,
எதிர் சென்று - எதிரேபோய், (மரியாதைசெய்துஅழைத்துக்கொண்டு வந்து),
போற்றி - துதித்து, அவன்தன் பாதம் - அவனுடைய திருவடிகளை,
கண்ணின்உம் சென்னிமீதும் கொண்டனர் - கண்களில் ஒற்றிக்கொண்டும்
தலையின்மேல் வைத்துக்கொண்டும், உயிர்உம் மெய்உம் குளிர்ந்தனர் -
உயிரும் உடம்பும் குளிரப்பெற்றவர்களாய், புண்டரம் நுதலினானை-
புண்டரத்தை யணிந்த நெற்றியையுடைய அந்தவியாசனை, பூசனை செய்த
பின்னர் - பூசை செய்த பின்பு, வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை
அனைத்துஉம் சொன்னார் - வண்டுகள் மொய்த்தற்கிடமான
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன் செய்த வஞ்சனை
யெல்லாவற்றையுஞ் சொன்னார்கள்;(எ- று.)

     சென்னிமீது கொண்டனர் என்பதற்கு-தங்கள் சிரசு அவருடைய
திருவடிகளிற்படும்படி சாஷ்டாங்கமாக விழுந்து தெண்டனிட்டன ரென்பது,
கருத்து.  'தொழுதுநெற்றியின்விபூதியாலன்னைதன் றுணையடித்துகணீக்கி'
என்று கீழ்ச் சம்பவச்சருக்கத்தில் வந்ததற்குஏற்ப, இங்கு, புண்டரம்என்பது -
திரியக்புண்டரமாகிய விபூதியைக் காட்டு மென்பர்.  குளிர்ச்சி - இங்கே,
மகிழ்ச்சி.  உயிரும் மெய்யுங் குளிர்ந்தனர் - அஃறிணையெழுவாய்
உயர்திணை யெழுவாயின்முற்றைக் கொண்டு முடிந்ததனால்,
திணைவழுவமைதி:  [நன்- பொது. 26]பூசனை-அருக்கியமளித்தல்
முதலிய சோட சோபசாரங்களைச் செய்தல்.                      (21)