பக்கம் எண் :

16பாரதம்ஆரணிய பருவம்

22.-இதுமுதல்நான்கு கவிகள்-ஒருதொடர் : வியாசன்
வார்த்தை: பாண்டவர்களைப் பலவகையாகத் தேற்றி
இறுதியாகச் சிவபிரானிடம் அருச்சுனன் அருந்தவஞ்
செய்துபாசுபதம்பெறவேணுமென்று கூறுதல்.

செறிந்தவர்க்கூற்றங்கோலாஞ் செய்தவமுனியுமுன்னே
குறிந்தனநிகழ்ந்தவெல்லாங் கூறுதல்கொடிதுபாவம்
பிறிந்தனதாயந்தன்னிற் பெரும்பகையினிதென்றன்றோ
அறிந்தவருரைத்தாரைய வவாவினுக்கவதியுண்டோ.

     (இ- ள்.)செறிந்தவர்க்கு - (தம்மை)அடைந்தவர்களுக்கு, ஊற்றம்
கோல் ஆம்-ஊன்றுகோல்போல உதவுகின்ற, செய் தவம் முனிஉம் - செய்த
தவங்களையுடைய வியாசனும், (பாண்டவர்களைநோக்கி),-முன்னே
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் - முன்னே கருதப்பட்டனவாகி நடந்த
செய்கையையெல்லாம், கூறுதல் - சொல்லுதல், கொடிதுபாவம்-
கொடுமையுடையதாகிய தீவினையாம்; 'பிறிந்தனதாயந்தன்னில் - மனம்
பிரிந்த பங்காளிகளைக் காட்டிலும், பெருபகை-பெரிய பகைவர்கள், இனிது -
இனியவர்களாவர்,'என்று அன்றோ - என்றல்லவோ, அறிந்தவர்-
தெரிந்தவர்கள், உரைத்தார்-சொன்னார்கள்; ஐய - ஐயனே !அவாவினுக்கு
அவதி  உண்டு ஓ - ஆசைக்கு  எல்லை உண்டோ? [இல்லையென்றபடி];
(எ- று.)

      "இழுக்கலுடையுழி யூற்றுக்கோ லற்றே, ஒழுக்கமுடையார்
வாய்ச்சொல்" என்னுந் திருக்குறளின் கருத்து, இங்கே அறியத்தக்கது.
தாயாதிகள் பகைவர்களைக்காட்டிலும் கொடியவராதலால், இங்ஙனம்
வஞ்சனை செய்தா ரென்பது, பின்னிரண்டடிக்குக் கருத்து; மனம்பிரிந்த
ஞாதிகளோடு வெளிக்குச் சினேகமாய் நாட்டில் உடனிருத்தலினும்
பகைமைபூண்டு பிரிந்து தனியே காட்டிலிருத்தலே  நன்றென்னுங் கருத்துக்
கொள்ளலாம்.  ஆசைக்கு அளவில்லை யாதலால் இவ்வாறு
செய்தாரென்றாயினும், ஆசைக்கு அளவில்லையாதலால் உள்ளமட்டில்
திருப்தியோடிருக்கவேண்டு மென்றாயினும் 'அவாவினுக்கவதியுண்டோ'
என்பதற்குக் கருத்துக்கொள்க.  "புறநட்டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை,
வெளியிட்டு வேறாதல் வேண்டும்"  என்றார் பிறரும்.  கொடிது பாவம்
என்றது, சிறிதும் பயனில்லாத காரியமென்னும் பொருளை
வற்புறுத்தும்பொருட்டு. இனி, இரண்டாமடிக்கு - முன்னே நடந்தவற்றைக்
குறித்துச்சொல்லுதல் கொடியது:  அங்ஙனம் நடந்தது முற்பிறப்பிற்செய்த
தீவினையின்பயனா மென்றுங் கொள்ளலாம்.  இனி, பாவம் பிறிந்தன என
இயைத்து-எண்ணம் வேறுபட்டனவான தாயங்கள் எனினும் அமையும்.
தாயம்=தாயத்தார்:  பகை=பகைவர்:  ஆகுபெயர்கள்.  குறிந்தன=மெலித்தல்.(22)

23.துன்றினரின்னலெய்தத் துன்னலராகித்தம்மில்
ஒன்றினர்செறினுமுள்ள துண்டெனவுணரத்தேற்றிக்
கன்றினர்கவலைதீர்த்தான் கண்ணுடைக்கருணைமூர்த்தி
குன்றினதுயர்ச்சியந்தக் குன்றினுக்கறியவுண்டோ.