பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்177

81.மண்டிமேலெழுந்திங்கெல்லா வுலகையுமடிக்குமாயச்
சண்டவாயுவின்பேர்வாளி தானவரவன்மேலேவ
அண்டமுந்துளங்கவோங்கு மருவரைப்பகழிவிட்டான்
எண்டிசைமுழுதுந்தன்பேரெழுதுபோர்விசயனென்பான்.

     (இ - ள்.)இங்கு - இப்போர்க்களத்தி லிருந்துகொண்டே, மேல்
எழுந்து - மேலே வீசி, மண்டி-நெருங்கி, எல்லா உலகை உம் -
உலகங்களெல்லாவற்றையும், மடிக்கும் - அழிக்கவல்ல, மாயம் -
தீங்குசெய்தலையுடைய,சண்டம் - உக்கிரமான, வாயுவின் பேர் வாளி -
வாயுவின் பெயரையுடைய பெரிய வாயவியாஸ்திரத்தை, தானவர் -
அசுரர்கள், அவன்மேல் ஏவ - அருச்சுனன் மீது பிரயோகிக்க,-எண் திசை
முழுதுஉம் - எட்டுத்திக்குக்கள் முழுவதிலும், தன் பேர் எழுது -
(கீர்த்தியினால்)தனது பேரை எழுதிய, போர் - போரில்வல்ல, விசயன்
என்பான் - அருச்சுனனென்று சிறப்பித்துக் கூறப்படுபவன், -அண்டம்உம்
துளங்க ஓங்கும் - உலகவுருண்டையிலுள்ளார் யாவரும் (கண்டு) நடுங்கும்
படி உயர்ந்துள்ள, அருவரை பகழி - (அழித்தற்கு) அரிய மலைமயமான
சைலாஸ்திரத்தை, விட்டான் - (அவ்வாயவ்யாஸ்திரத்துக்கு எதிராக)
விடுத்தான்;(எ - று.)

     மலைகாற்றைத் தடுத்தலினால்,வாயுவின் அஸ்திரத்திற்குச்
சயிலஅஸ்திரம் மாறாகுமென்க.  தானவர், தைத்தியர் என்பவற்றிற்குப்
பொருள் வேறுபாடு உண்டாயினும், அவ்வேறுபாட்டைக் கருதாமற்
பொதுப்படக் கூறுதலும், ஒருகவிசமயமாம்.  'என்பான்'எனச்
செயப்படுபொருள் வினைமுதல்போலக்கூறப்பட்டது.  அண்டருந்துளங்க
என்றும் பாடம்.                                      (257)

82.காற்றும்வெங்கனலுங்காரு மிடியுங்கன்மழையுமெங்கும்
தோற்றியவிருளுமின்னுந் திசைதொறுஞ்சூழ்ந்துபொங்கக்
கூற்றும்வாய்குழறியஞ்சக் கொடியமாமாயவாளி
ஆற்றல்சாலரியன்னான்மேலெறிந்தடலவுணரார்த்தார்.

     (இ - ள்.)அடல் அவுணர் - வலிமையையுடைய அசுரர்கள்,-
காற்றுஉம் - வாயுவும், வெம் கனல்உம் - வெவ்விய அக்கினியும், கார்உம் -
மேகமும், இடியும்-, கல்மழைஉம் - சிலாவருஷமும், எங்குஉம் தோற்றிய
இருள்உம் - எவ்விடத்துங் காணப்பட்ட அந்தகாரமும், மின்உம் -
மின்னலும், திசைதொறுஉம் - எல்லாத்திக்குக்களிலும், சூழ்ந்து பொங்க -
சுற்றிலும் நிறையவும்,- கூற்றுஉம் - யமனும், வாய் குழறி அஞ்ச - பயந்து
வாய் குளறவும், கொடிய மா மாயம் வாளி - கொடுந்தன்மையையுடைய
பெரிய  மாயைவடிவமான மோஹாஸ்திரத்தை, ஆற்றல் சால் அரி
அன்னான்மேல்- வலிமைமிகுந்த சிங்கத்தை யொத்த அருச்சுனன் மேலே,
எறிந்து - பிரயோகித்து,-ஆர்த்தார் - (இனிவெல்லலாமென்னும் உறுதியால்)
ஆரவாரஞ்செய்தார்கள்;
(எ - று.)-வாய்குழறியஞ்ச - விகுதி பிரித்துக்
கூட்டப்பட்டது.                                            (258)