பக்கம் எண் :

208பாரதம்ஆரணிய பருவம்

137.பசுபதியருளிய பகழிமுன்வரலும்
விசயனுநறைவிரி மலர்கொடுபரவித்
திசைதொறுமமர்புரி திறலுடைவடிவேல்
அசுரர்தமுடலுக வடலுடன்விடவே.

     (இ-ள்.) பசுபதி அருளிய பகழி - சிவபிரான் கொடுத்தருளிய அந்த
அஸ்திரம், முன் வரலும் - எதிரில் வந்த அளவில்,-(அதனை),விசயன்உம் -
அருச்சுனனும், நறை விரி மலர்கொடு - தேனொழுகுகின்ற பூக்களினால்,
பரவி - அருச்சித்து, திசைதொறுஉம் - (தன்னைச்சுற்றிலும்) எல்லாத்
திக்குக்களிலுமிருந்து, அமர் புரி, - போர் செய்கின்ற, திறல் உடை -
வலிமையையுடைய, வடி வேல்-கூர்மையையுடைய வேலாயுதத்தையுடைய,
அசுரர்தம் - அசுரர்களது, உடல் உக - உடல் அழியும்படி, அடலுடன் -
வலிமையுடனே, விட - பிரயோகிக்க,-(எ-று.)-போய்ப்புக்கதுஎன்க.

    பசுபதி-ருஷபத்துக்குத் தலைவன்: அல்லது, உயிர்களுக்குத்
தலைவன்;பசு என்னும் வடமொழி இப்பொருள்களையுணர்த்துதலை"பசு
ஏறு சீவன் ஆவாம்"என்னும் நிகண்டினால்அறிக.  'பசுபதியருளிய
பகழிமுன்வரலும்'என்றது அநுவாதம்;தொடர்ச்சியை விளக்க வந்தது.
நறைவிரிதல்-வாசனைவீசுதலுமாம்.                          (313)

138.அக்கணைவிசையுடனகல்வெளிமிசைபோய்
நக்கதுபிறையெயி றிளநிலவெழவே
முக்கணுமழலுக முரணொடுமுடுகிப்
புக்கதுதனுசர்த முடல்பொடிபடவே.

     (இ-ள்.) அ கணை- அந்த அஸ்திரம், விசையுடன் - வேகத்துடனே,
அகல் வெளிமிசை-பரந்த ஆகாயத்திலே, போய்-சென்று, பிறை எயிறு இள
நிலவு எழ-இளஞ்சந்திரன்போன்ற பற்களினின்றும் இளமையான
நிலாப்போன்ற வெள்ளொளி தோன்றும்படி, நக்கது-சிரித்து, மு கண்உம்
அழல் உக - (தனது) மூன்றுகண்களினின்றும் நெருப்புச் சிந்தும்படி,
முரணொடு-வலிமையுடனே,தனுசர் தம் உடல் பொடிபட-அசுரர்களது
உடம்பு தூளாம்படி, முடுகி புக்கது-உக்கிரமாய்ப் பிரவேசித்து: (எ-று.)

     எயிற்றுக்குப்பிறையுவமை, வளைவுக்கும்ஒளிக்கும் வெண்மைக்கு
மென்க.  சிரிக்குங் காலத்துப் பற்களின் வெள்ளொளி சிறிது
வெளித்தோன்றுதலால், 'நக்கதுபிறையெயிறிளநிலவெழவே'என்றார்.
முக்கணும் என்பதற்கு - மூன்றுமுகம்படைத்த அந்த அஸ்திரத்துக்கு
ஒவ்வொரு முகத்திலும் மூன்றுகண்களிருந்தன என்க.  முக்கணும், உம்-
முற்றுப்பொருளது.                                       (314)

139.மாருதம்விசையுடன் வடவனல்கொளுவிக்
கார்தொறுநிரைநிரை கடிகுவததுபோல்
தேர்தொறுமமர்புரி யவுணர்கடேகத்து
ஓரொருகணையொருநொடியினிலுறவே.