பக்கம் எண் :

நிவாதகவசர் காலகேயர் வதைச்சருக்கம்219

     இதில்,அசுரரழிதலாகிய காரியத்தை முன்னும், வில்லின் தொழிலாகிய
காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகச் சொல்லியதனால்,
மிகையுயர்வுநவிற்சியணி.  இதில், காரணகாரியங்களின் முன்பின்நிகழ்தலாகிய
முறைபிறழ்வு, காரியவிரைவைத் தெரிவிக்க வந்தது.  மற்று-அசை.  இடி-
உவமையாகுபெயர்.                                         (331)

156.ஆயதுநிகழ்ந்தபின்ன ரயனருள்வரத்தினாலே
ஏயவாள்வலியின்மிக்க விரணியபுரத்துள்ளோரைத்
தீயவெம்பகழியொன்றாற்செற்றனனிமைப்பின்முற்றும்
மாயமோமனிதன்வில்லின் வன்மையோதெரிந்ததில்லை.

     (இ - ள்.) ஆயது நிகழ்ந்த பின்னர் - ஆகிய அச் செய்கை
நடந்தபின்பு, அயன் அருள் வரத்தினால்ஏஏய - பிரமன் கொடுத்தருளிய
வரத்தினாலேபொருந்திய, வாள் வலியின் மிக்க-ஆயுதபலத்தினால்மிகுந்த,
இரணியபுரத்து உள்ளோரை-இரணியபுரத்திலுள்ள காலகேயர்
அறுபதினாயிரவரை,தீய வெம் பகழி ஒன்றால்-மிகவுங்கொடிய அஸ்திரம்
ஒன்றினால்,இமைப்பின் - நொடிப் பொழுதினுள்ளே, முற்றுஉம் - முழுதும்,
செற்றனன் - அழித்தான்:(அங்ஙனமழித்தது), மாயம்ஓ -
மாயையினாலாகியதோ? மனிதன் வில்லின் வன்மைஓ - மனிதனாகிய
அருச்சுனனது வலிய வில்லின் பலத்தாலாகியதோ? தெரிந்தது இல்லை-
எனக்குத் தெரியவில்லை;    (எ- று.)

     ஏய-ஏய்என்னும் பகுதியடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்:
யகரவிடைநிலைபகுதிக்கும் விகுதிக்குமிடையிலே புணர்ந்து கெட்டது:இனி,
இதனைச்செயவெனெச்சமாகக் கொண்டு, பொருந்தவெனவுரைத்து, மிக்க
வென்பதனோடுஇயைத்தலுமாம்.  தீய வெம்-ஒருபொருட் பன்மொழி.
இமைப்பு-ஒரு மனிதன் இயல்பாகக் கண்களின் இமைகளைஒருகால்
மூடித்திறந்தற்கு வேண்டும்பொழுது.                         (332)

157.என்றுகொண்டுயர்தேர்ப்பாக னிசைத்தனயாவுங்கேட்டு
வன்றிறலமரர்கோமான் மனமகிழ்ந்திருந்தபோதில்
துன்றியவமரர்யாருந் தனித்தனிசுருதியோடும்
வென்றிடுபடையுமற்றும் வேண்டுவபலவுமீந்தார்.

     (இ - ள்.)உயர் தேர் பாகன் - சிறந்த ரதசாரதியான மாதலி, என்று
கொண்டு இசைத்தன - என்று சொல்லியவையாகிய, யாஉம்-
எல்லாவற்றையும், கேட்டு-, -வல் திறல் அமரர் கோமான் - மிக்க
வலிமையையுடைய தேவேந்திரன், மனம் மகிழ்ந்து இருந்த போதில் -
இதயஞ் சந்தோஷித்திருந்த சமயத்தில்,-துன்றிய அமரர் யார்உம்-
(அங்குவந்து) நெருங்கியுள்ள தேவர்களனைவரும்,தனித்தனி -
தனியேதனியே, சுருதியோடுஉம் - வேதமந்திரங்களுடனே, வென்றிடு
படைஉம்-(பகைவரை) வெல்லுதற்கு ஏற்ற ஆயதங்களையும்,மற்றுஉம்
வேண்டுவ பலஉம்-இன்னும்வேண்டுவன பலவற்றையும், ஈந்தார்-
கொடுத்தார்கள்;(எ - று.)