மலையொத்த,திண் தோள் - வலிய தோள்களையுடைய,வாள் அரக்கன் - (சந்திரகாசமென்னும்) வாட்படையையுடைய இராட்சதனாகியஇராவணன், குலத்தோடுஉம் - குலத்துடனே, மடிய - இறந்திடுமாறு, முன்னம் - முன்பு, வில்கொண்டு - (கோதண்டமென்ற) வில்லினால்,சரம் தொடுத்து - அம்பை எய்து, புரைஇல் கேள்வி விண்ணவர்தம் துயர் தீர்த்த-குற்றமற்ற நூற்கேள்வியையுடைய தேவர்களின் துன்பத்தைப் போக்கியருளிய, வீரம் ராமன்-வீரகுணத்தைக் கொண்ட ஸ்ரீராமனுடைய, கல் கொண்ட அகலியை கல்வடிவத்தைப் பெற்ற அகலிகை, தன் உருவம் - நிஜவடிவத்தை, மீள - மறுபடியும், கவின்கொள்ள - அழகுபொருந்தப்பெறுமாறு, கொடுத்த-, திரு கமலம் பாதம் - சிறந்த தாமரைமலர் போன்ற திருவடிகளை,சொல்கொண்டு - சொல்லினால்,துதித்து-புகழ்ந்து, (அங்ஙனம் புகழ்வதனாலான களிப்பினால்),எழுந்து துள்ளி - துள்ளியெழுந்து, நாள்உம்-பிரதிதினமும், தொழுமவர்ஏ - தொழுபவர்களே, எழு பிறவி - ஏழுவகைப்பட்ட பிறவிகளிலே, துவக்கு-சம்பந்தம், அற்றார்-நீங்கினவராவர்;(எ - று.) ஸ்ரீராமனதுதிருவடிகளைப்புகழ்ந்து துள்ளியெழுமவர், அகலிகை சாபவிமோசனம்பெற்று நிஜவடித்தை யடைந்தாற்போல, தமக்கு நேர்ந்துவரும் பிறவித்துயர் நீங்கி மீளாவுலகமாகிய நற்கதி சேர்வரென்பதாம். ஸ்ரீராமனுடைய கமலபாதத்துக்கு அகலியை தன்னுருவமீளக் கவின்கொள்ளக் கொடுத்த, என்ற அடைமொழி கொடுத்தது, கருத்துடையடைமொழியாம். ஆன்மாவிற்கு வரக்கூடிய ஏழுபிறவிகளாவன - தேவர் மக்கள் விலங்கு புள் ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என இவை. இதுமுதல் இருபதுகவிகள் - பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள்காய்ச்சீர்களும், மற்றவை மாச்சிர்களுமாகி வந்த கழிநெடிலடி நான்கு கொண்ட எண்சீராசிரிய விருத்தங்கள். (338) 2.-கவிக்கூற்று: அருச்சுனன் இந்திரனருகிலினிதிருப்ப, தருமன் ஆரணியத்திற்புரிந்ததைக் கூறுவோ மெனல். இப்பால்வெஞ்சிலைவிசயன்றுறக்கமீதிலிந்திரன்றனருகிருப்பவி மையோரூரில், அப்பானற்றவம்புரியுந்தழல்கூர்வேள்வி யந்தணர்தங் குழாஞ்சூழவழகார்மண்ணில், ஒப்பாருமிலாதமடமயிலினோடுமுயர்வனத்தினிடை நாளுமொருநாள்போலத், தப்பாமலறம்வளர்க்கும்நீதி வேந்துத்தம்பியரும் புரிந்ததினிச் சாற்றுகிற்பாம். |
(இ-ள்.) வெம்சிலைவிசயன் - கொடிய வில்லையுடையஅருச்சுனன், இப்பால் - இங்கு, துறக்கம்மீதில்-விண்ணுலகில்,-இமையோர்ஊரில் - தேவர்களின் வாழிடமான அமராவதிநகரில், இந்திரன்தன் - இந்திரனுடைய, அருகு - சமீபத்திலே, இருப்ப - இராநிற்க,-அப்பால்- அங்கு, அழகு ஆர் மண்ணில் - அழகுநிரம்பிய பூலோகத்தில், நல் தவம் புரியும் - சிறந்த தவத்தைச் செய்பவர்களாய், தழல் கூர் வேள்வி அந்தணர்தம் - அக்கினிமிகுதியாக |