பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்285

     கரன் என்னுஞ் சொல்லுக்கு-கொடியவ னென்று பொருள்; இவன்
இராவணனுக்கு உடன்பிறந்த முறையாகும் ஒராக்கன்: இவனை இராவணன்
சூர்ப்பணகைக்குப் பாதுகாவலாகத் தண்டகாரணியத்தில் ஜகஸ்தாநத்தில்
பலசேனைகளோடு வைத்திருந்தான்; கோதாவரிதீரத்திற் பஞ்சவடியில்
வசித்திருந்த இளையபெருமாள் சூர்ப்பணகையை மூக்கு முதலிய
சிலஉறுப்புக்களை யறுத்திட்டதை யறிந்து, அதுகாரணமாக இவன் தூஷணன்
திரிசிரன் என்பவர்களோடும் பதினாலாயிரங்கோடி சேனைத்தலைவர்களோடும்
இராமபிரானை வந்துஎதிர்த்து மிகவிரைவில் மிகஎளிதில் அவ்வெம்பரெுமானாற்
கொல்லப்பட்டுக் கூட்டத்தோடு ஒழிந்துபோனா னென்பது வரலாறு. காகுத்தன்
- காகுத்ஸ்தன் என்னும் வடமொழித் திரிபு; ககுத்ஸ்தனென்பவனது வமிசகுமார
னென்று பொருள்: சூரியகுலத்தரசனாகிய புரஞ்சயனென்பவன்
எருதுவடிவங்கொண்டுவந்த இந்திரனை வாகனமாகக் கொண்டு அவனது
முசுப்பின்மே லேறிச்சென்று போர்செய்ததனால், ககுத்ஸ்தனென்று
பெயர்பெற்றான்: ககுஸ்த்தன்-எருதுமுசுப்பின்மேலிருப்பவன்: ககுத்-திமில்,
ஸ்தன்-இருப்பவன்.                                            (441)

105.-இதுவும், மேற்கவியும்-சூளகம்: மீண்டும் அரக்கர் பொர,
அவரை வீமன் அழித்தமை.

சக்கரஞ்சூலம்பாசந்தண்டம்வேல்கப்பணம்வாண்
முற்கரங்கணையம்விட்டேறெழுக்கொழுமுசுண்டிகுந்த
மெக்கரங்களினுமேந்தியாவருமிவன்மேலேவி
யக்கணந்தன்னின்மீண்டுமகங்கரித்தார்த்தகாலை.

     (இ-ள்.) அ கணம் தன்னில் - அந்த க்ஷணத்திலே, மீண்டும்-மறுபடியும்,
யாவர்உம் - எல்லோரும், அகங்கரித்து - செருக்குக்கொண்டு
(தளர்ச்சியொரிந்து), சக்கரம்-சக்கரத்தையும், சூலம்-சூலத்தையும், பாசம் -
பாசாயுதத்தையும், தண்டம்-கதையையும், வேல்-வேலையும், கப்பணம் -
கப்பணிமென்னும் முள்ளாயுதத்தையும், வாள்-வாளையும், முற்காம் -
இருப்புலக்கையையும், கணையும்-வளை தடியையும், விட்டேறு-எறியீட்டியையும்,
எழு-இருப்புத்தடியையும், கொழு-இருப்புக்கொழுவையும், முசுண்டி -
முசுண்டியென்னும் ஆயுதத்தையும், குந்தம்-பேரீட்டியையும், எக்
கரங்களின்உம்-எல்லாக்கைகளிலும், ஏந்தி-எடுத்து, இவன்மேல் ஏவி-இவ்வீமன்
மேற் பிரயோகித்து, ஆர்த்த காலை-ஆரவாரித்தபொழுது,-(எ-று.)-
ஆர்த்தகாலை துணித்துச் சிரித்தன னென மேற்கவியோடு இயையும்.

     'கப்பணம்-இரும்பால் ஆனைநெருஞ்சிமுள்ளாகப் பண்ணியது' என்பர் நச்சினார்க்கினியர். முற்காம்-முத்கரம் என்னும் வடசொற் சிதைவு. கணையம் என்பதில், அம்-சாரியையாயின், அம்பென்க. கொழு என்பதைக் கொழுமையனெ்னும் பண்புப்பெயரின் விகாரமாக்கி, முகண்டிக்கு அடைமொழியென்னலுமாம்.                        (442)