பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்293

"தந்தைசொல்மிக்க மந்திரமில்லை"என்றவாறு பிதிருவாக்கியத்தை நன்கு
மதித்தமை தோன்ற, 'தந்தையுரைத்தருள்வாய்மை தலைமேற்கொள்ளா'
என்றது.                                                 (457)

121.-உருத்திரசேனன்வீமனைவினாவுதல்.

கண்டுமருத்தருள் காளைதன்னைநோக்கி
வண்டுமிடைப்பயி லாதகாவில்வந்து
மிண்டுமரக்கர்கு லத்தைவீணேயாவி
கொண்டுபடுத்தனையார்நீகூறுகென்றான்.

     (இ-ள்.) கண்டு- (அங்ஙனம்) பார்த்து, (உருத்திரசேனன்), மருத்து
அருள் காளைதன்னைநோக்கி - வாயுதேவன் பெற்ற குமாரனான
வீமனைப்பார்த்து, 'வண்டுஉம்இடை பயிலாத காவில் வந்து-வண்டுகளும்
உள்ளிடத்திலே வந்து நுழையப்பெறாத[மிக்ககாவலையுடைய]
இச்சோலையிலே(நீ) வந்து, மிண்டும் அரக்கர் குலத்தை-(அங்குக் காவலாக)
நெருங்கியுள்ள இராக்கதர்கூட்டத்தை, வீணே ஆவி கொண்டு படுத்தனை-
வீணாய்உயிரை (உடம்பினின்றுங்) கொண்டு [கொன்று]அழித்தாய்;நீ யார்
கூறுக-நீ யார் சொல்வாயாக,'என்றான்- என்று கூறினான்;(எ-று.)

     காளை-இளவெருது;வீமனுக்கு உவமையாகுபெயர்.  'வண்டும்'என்ற
சிறப்பும்மை, அதற்குப் பூவிடத்துரிய தன்மையை விளக்கும்.  காக்கப்படுவது,
கா;காரணக்குறி.                                           (458)

122.-வீமசேனன்உருத்திரசேனனுக்குத் தன்னைத்
தெரிவித்தல்.

நின்னளகாபதி மைந்தர்சாபநீக்க
முன்மருதூடுதவழ்ந்த வாகைமொய்ம்பற்கு
இன்னருண்மைத்துனன் மண்ணில்யாரும்போற்றும்
மன்னவன்வீமன்மருத்தின் மைந்தனென்றான்.

     (இ-ள்.)'நின்அளகாபதி மைந்தர் சாபம் நீக்க - உனது தந்தையான
இந்த அளகாபுரிக்கு அரசனானகுபேரனது குமாரர்களின் சாபத்தை
ஒழித்தற்பொருட்டு, முன் - முன்னொருகாலத்திலே, மருது ஊடு தவழ்ந்த -
மருத மரங்களினிடையே தவழ்ந்து சென்ற, வாகை மொய்ம்பற்கு-(வெற்றிக்கு
அறிகுறியான) வாகை மரப்பூமாலையைச்சூடிய தோள்களையுடைய
கண்ணபிரானுக்கு, இன் அருள் மைத்துனன் - இனிய கருணைக்கு
விஷயமான மைத்துனனாவேன்: மண்ணில் யார்உம் போற்றும் மன்னவன் -
நிலவுலகத்தில் எல்லோரும் புகழும் அரசகுலத்தவனாவேன்; வீமன் -
வீமனென்னும் பெயருடையேன்: மருத்தின் மைந்தன் - வாயுகுமாரனா
வேன் (யான்),'என்றான்-என்று(வீமன்) கூறினான்,  (எ-று.)

     கண்ணன்குழந்தையாயிருக்குங் கலாத்தில் துன்பப்படுத்துகின்ற பல
விளையாடல்களைச்செய்யக் கண்டு கோபித்த யசோதை